கூட்டணிக்காக தவம் இருக்கிறார்கள் என அதிமுகவை சொல்லவில்லை என்று அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் சனிக்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நானும், எடப்பாடி பழனிசாமியும் கூட்டணி குறித்து தெளிவாக கூறி இருக்கிறோம். அ.தி.மு.க என்ற பெயரையே நான் எங்கும் எடுக்கவில்லை. விவாதத்திற்காக இதுபோன்று பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.
விவாதத்திற்காக நான் சொன்னதையும் எடப்பாடியார் சொன்னதையும் திரித்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள். பாஜகவை பற்றி நான் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறேன். அ.தி.மு.கவை பற்றி எடப்பாடியாரும் தெளிவாக பேசி இருக்கிறார். அரசியல் விமர்சகர் என்ற போர்வையில் பாஜகவை திட்டுவதையே நோக்கமாகக் கொண்டு இருக்கிறார்கள்.
அரசியல் விமர்சகர்கள் நடுநிலையாக பேசுவதில்லை. அவர்களுக்கு தி.மு.க ஜெயிக்க வேண்டும் என்பதே குறிக்கோள். எது போன்ற கூட்டணி வர வேண்டும் என்பதை அரசியல் விமர்சகர்களே முடிவு செய்கிறார்கள். அப்படி என்றால் நானும் எடப்பாடியாரும் எப்படி? அதை பற்றி தொடர்ந்து பேச முடியும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
சில நாள்களுக்கு முன்பு சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, தங்களுக்கு திமுகதான் பிரதான எதிரி என்று கூறியிருந்தார். அவ்வாறெனில் வரும் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியா என்று கேள்வி எழுந்தது.
நேற்று கோவையில் செய்தியாளர்களுடன் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இதற்கு பதிலளிக்கும்போது, ‘பாஜக தீண்டத்தகாத கட்சி, நோட்டா கட்சி, கூட்டணியில் பாஜக இருந்ததால்தான் தோற்றோம், பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டடோம் என்றெல்லாம் கூறியவர்கள் இன்று பாஜகவுடன் கூட்டணி வைக்க தவம் கிடக்கிறார்கள்.
தவம் கிடப்பதாக அண்ணாமலை கூறியது அதிமுகவை அல்ல: இபிஎஸ் பேட்டி
அவ்வாறு தவம் இருக்க வேண்டிய சூழ்நிலையை பாஜக தொண்டர்கள் ஏற்படுத்தியுள்ளனர். அதற்கு நான் பெருமைப்படுகிறேன். நேரம் வரும்போது கூட்டணி குறித்து பேசப்படும்’ என்றார்.
நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக அதிமுகவை அண்ணாமலை இவ்வாறு கூறியிருந்தார்.