டொனால்ட் டிரம்ப் பதவியேற்புக்குபின், முதல் வெளியுறவு அமைச்சரவை கூட்டத்தில் இந்தியாவுடன் முதல் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை இரவு பதவியேற்றார். தொடர்ந்து, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சராக மார்க்கோ ரூபியோ செவ்வாய்க்கிழமையில் பதவியேற்றார். இந்த நிலையில், அதிபராக டிரம்ப் பதவியேற்றவுடன், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ முதலில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருடன்தான் விவாதித்தார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் தலைமை அலுவலகத்தில் சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக நீடித்த இரு நாட்டு விவாதத்தில் இந்தியாவுடனான உறவை வலுப்படுத்துவதற்கு டிரம்ப் முக்கியத்துவம் அளிப்பது, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், பாதுகாப்பு ஒத்துழைப்பு, எரிசக்தி, பொருளாதார உறவுகளை மேம்படுத்துவது, புலம்பெயர்வோர் தொடர்பான பிரச்னை, இந்தோ – பசிபிக் விவகாரம் உள்ளிட்டவை விவாதிக்கப்பட்டன.