சென்னை: பயணிகளின் சேவைக்காக ‘சாட்பாட்’ வசதியை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிமுகம் செய்துள்ளது.
இது தொடர்பாக துறைசார் அதிகாரிகள் கூறியதாவது: ”மாநகர போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு ஏற்படும் அசவுகரியம், நிறை, குறைகளுக்குத் தீர்வு காண பயணிகள் புகார் பிரிவு செயல்பட்டு வருகிறது. மேலும் பயணிகள் தங்கள் புகார்களை கட்டணமில்லா எண் 149, மின்னஞ்சல் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பொதுமக்களின் பேருந்து பயன்பாட்டை மேம்படுத்த மாநகர போக்குவரத்துக் கழகத்தில் வாட்ஸ்-அப், சாட்பாட் செயலி வசதி தொடங்கப்பட்டுள்ளது. இதனை மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார். இந்த புதிய வசதியை 94450 33364 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இதில் ”Hi” என குறுஞ்செய்தி அனுப்பியவுடன், விசாரணை, புகார், தவறவிட்ட பொருட்கள், எனது புகாரின் நிலை, கருத்து மற்றும் பரிந்துரை ஆகியவை திரையில் தெரியும்.
இதில் வேண்டியவற்றை தேர்வு செய்து, உரையாடலை தொடரலாம். இதில் பணியாளர், பேருந்து சேவை உள்ளிட்டவை தொடர்பாகவும் புகாரை பதிவு செய்ய முடியும். போதிய விவரங்கள் கிடைத்த பின்னர் சேவை குறித்து மதிப்பீடு செய்யவும் முடியும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.