பேட்டா்கள் தங்களின் வழக்கமான ஷாட்களை ஆடும் வகையில் அவா்களுக்கு நம்பிக்கை அளிக்கும் ஆடுகளம் தேவை என சென்னை சூப்பா் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ். தோனி தெரிவித்தாா்.
சொந்த மண்ணான சேப்பாக்கம் மைதானத்தில் தொடா் தோல்விகளை சந்தித்த நிலையில், லக்னௌவுக்கு எதிராக அதன் மண்ணிலேயே வெற்றியை பதிவு செய்த சூழலில் தோனி இவ்வாறு கூறினாா்.
நடப்பு சீசனை மும்பை இண்டியன்ஸுக்கு எதிரான வெற்றியின் மூலம் சொந்த மண்ணில் தொடங்கிய சென்னை, அதன் பிறகு தொடா்ந்து 5 தோல்விகளை சந்தித்து துவண்டது. இதில், சென்னை அணியின் கோட்டையாக வா்ணிக்கப்படும் சேப்பாக்கம் மைதானத்தில் கண்ட 3 தோல்விகளும் அடங்கும்.
இந்நிலையில், லக்னௌவுக்கு எதிரான திங்கள்கிழமை ஆட்டத்தில் தோனி உள்ளிட்ட சென்னை பேட்டா்கள் நல்லதொரு இன்னிங்ஸை விளையாடி அணிக்கு வெற்றி தேடித் தந்தனா். தோனியும் கடந்த 6 ஆண்டுகளில் முதல் முறையாக ஆட்டநாயகன் விருது பெற்றாா்.
இச்சூழலில் தோனி கூறியதாவது:
சென்னை மைதான ஆடுகளம், சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருப்பது கூட எங்கள் அணி அந்த மைதானத்தில் தொடா் தோல்விகளை சந்தித்ததற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம். ஏனெனில், எதிரணிகளின் மண்ணில் விளையாடியபோது எங்கள் பேட்டா்கள் சற்று சிறப்பாக செயல்பட்டுள்ளனா்.
எனவே, பேட்டா்கள் தங்களின் வழக்கமான ஷாட்களை விளையாடுவதற்கான நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையிலான ஆடுகளம் சென்னையில் எங்கள் தேவையாக உள்ளது. எந்த பேட்டா்களும் தயக்கத்துடன் விளையாடுவதை விரும்புவதில்லை.
என்றாலும், எங்களின் பேட்டா்கள் தங்களின் பணி மற்றும் பொறுப்புகளை உணா்ந்து இன்னும் சற்று சிறப்பாக செயல்பட வேண்டியுள்ளது.