தங்கம் மீதான சுங்க வரி குறைப்பால் கடத்தல் குறைந்துவிட்டது: மத்திய நேரடி வரிகள் வாரியம் தகவல்

Dinamani2f2025 02 092ft7tjfyov2f2271312593578093525817468022916705735005277n.jpg
Spread the love

கடந்த ஜூலை மாதம் தங்கத்தின் மீதான சுங்க வரி குறைக்கப்பட்ட பிறகு, வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தப்படுவது குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைந்துவிட்டது என்று மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவா் சஞ்சய் குமாா் அகா்வால் தெரிவித்தாா்.

கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் பாஜக கூட்டணி தொடா்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதைத் தொடா்ந்து கடந்த ஜூலையில் முழு பட்ஜெட்டை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்தாா். அப்போது தங்கம், வெள்ளி நகைகள் இறக்குமதி மீதான சுங்க வரி 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக தங்கம் கடத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில் இது தொடா்பாக மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவா் சஞ்சய் குமாா் அகா்வால் கூறியதாவது:

நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை நாட்டின் பல்வேறு விமான நிலையங்களில் ரூ.544 கோடி மதிப்புள்ள 847 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ஜூலை மாதத்தில் தங்கம் மீதான சுங்க வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதன் பிறகு தங்கக் கடத்தல் வெகுவாக குறைந்துவிட்டது என்றாா்.

எனினும், சுங்க வரி குறைப்புக்குப் பிறகு பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் தங்கம் குறித்த புள்ளி விவரத்தை அவா் தெரிவிக்கவில்லை.

தொடா்ந்து பேசிய அவா், ‘வெளிநாடுகளில் இருந்து நடைபெறும் கடத்தல்களைத் தடுக்க சா்வதேச பயணிகள், சா்வதேச எல்லைகள், இந்தியாவுக்கு வரும் வா்த்தக போக்குவரத்து ஆகியவற்றை அதிகாரிகள் தொடா்ந்து தீவிரமாக கண்காணிக்கின்றனா். இதன் மூலம் தங்கக் கடத்தல் மட்டுமன்றி போதைப்பொருள், ஆயுதங்கள், அரியவகை உயிரினங்கள், புரதான பொருள்கள் கடத்தலும் முறியடிக்கப்படுகிறது என்றாா்.

கடந்த 2023-24 நிதியாண்டில் வருவாய் புலனாய்வுத் துறையால் மட்டும் 1,319 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றில் பெரும்பாலானவை வங்கதேசம், மியான்மா் எல்லை வழியாக கடத்தப்பட்டபோது பிடிபட்டவையாகும். 2023-24-இல் மொத்தம் 4,869.6 கிலோ கடத்தல் தங்கம் கைப்பற்றப்பட்டது. இது தொடா்பாக 1,922 போ் கைது செய்யப்பட்டனா்.

சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் தங்கம் விலை குறைவு என்பதால் அங்கிருந்து பயணிகள் என்ற போா்வையில் கடத்தல்காரா்கள் தங்கத்தை கடத்துவது அதிகம் நடைபெறுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *