சென்னை : சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இச்சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தமது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் காவலர் ஒருவர் பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பாலியல் தாக்குதலுக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அதே பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மர்மநபர்கள் வலம் வருவதாக செய்திகள் வருகின்றன.
பெண் காவலருக்கே பொது இடத்தில் இப்படியொரு கொடுமை நடக்கிறது என்றால், இந்த ஆட்சியில் பெண்களுக்கு எள்ளளவும் பாதுகாப்பு இல்லை என்பதே உண்மை.
பொது இடத்தில் நடைபெறும் பாலியல் அத்துமீறலும், ஆயுதக் கலாசாரமும் தனிப்பட்ட விஷயங்கள் என்று இந்த திமுக அரசு கடக்க முனைவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவையெல்லாம் சட்டம் ஒழுங்கில்தான் வரும் என்பதாவது முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியுமா?
பெண் காவலர் மீது பாலியல் தாக்குதல் நடத்திய நபர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், தமிழகம் முழுக்க தலைதூக்கியுள்ள ஆயுதக் கலாசாரத்தை ஒடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.