நடிகர் விஜய் சேதுபதியின் புதிய படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டு நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான ‘மகாராஜா’ மற்றும் ’விடுதலை – 2ம் பாகம்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் அவருக்கு வெற்றிப் படங்களாக அமைந்தன.
தொடர்ந்து, இயக்குநர் மிஷ்கினின் டிரெயின் படத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.
அடுத்ததாக, பிரபல தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். பான் இந்திய மொழிகளில் இப்படம் உருவாகவுள்ளது.
இதனை பூரி ஜெகன்நாத் மற்றும் நடிகை சார்மி கவுர் இணைந்து தயாரிக்கின்றனர். ஜூன் மாதம் படப்பிடிப்பு துவங்கும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், காக்கிச் சட்டை, கருடன் படங்களின் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி புதிய படத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில், நடிகர் சசிகுமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். சுந்தர பாண்டியன் படத்திற்குப் பின் இருவரும் இணைந்து நடிக்கும் தகவல் ரசிகர்களிடம் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது, துரை செந்தில்குமார் ’லெஜண்ட்’ சரவணன் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இப்படம் முடிவதற்குள்ளே தன் அடுத்த படத்தின் பணிகளையும் துவங்கியுள்ளார்.
இதையும் படிக்க: கேரளத்தில் ஜெயிலர் – 2 படப்பிடிப்பு!