சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அபாரமாக விளையாடிய விராட் கோலி சதம் விளாசி அசத்தினார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் நேற்று துபையில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி சதம் விளாசி அணியின் வெற்றிக்கு உதவினார்.
இதையும் படிக்க: “கோஹினூர் வைரம்…” விராட் கோலியை பாராட்டிய முன்னாள் இந்திய வீரர்!
பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றையப் போட்டியின்போது, இந்திய அணியின் வெற்றிக்குத் தேவையான ரன்கள் குறைந்துகொண்டே வந்ததால், விராட் கோலி சதம் விளாசுவாரா? மாட்டாரா? என்ற பரபரப்பு ரசிகர்களுக்கு தொற்றிக் கொண்டது. அக்ஷர் படேல் களமிறங்கும்போது, விராட் கோலி 86 ரன்களுடன் களத்தில் இருந்தார். அணியின் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டன.
போட்டியின் 42-வது ஓவரை வீசிய ஷாகின் ஷா அஃப்ரிடி, அந்த ஓவரில் மூன்று அகலப் பந்துகளை வீச, விராட் கோலி சதம் விளாசுவாரா என்ற சந்தேகம் அதிகமானது.
அக்ஷர் படேல் கூறியதென்ன?
விராட் கோலி சதம் விளாசுவதற்கு உதவியது குறித்து இந்திய அணியின் ஆல்ரவுண்டர் அக்ஷர் படேல் பேசியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: போட்டியின் இறுதிக்கட்டத்தில் நானும் விராட் கோலியின் சதத்துக்காக கணக்குப் போட தொடங்கிவிட்டேன். நான் பேட்டிங் செய்யும்போது பந்து எட்ஜ் ஆகி பவுண்டரி சென்றுவிடக் கூடாது என நினைத்தேன். அதனால், விராட் கோலியுடன் களத்தில் நின்று விளையாடிய தருணம் கொஞ்சம் வேடிக்கையானதாக இருந்தது. முதல் முறையாக இவ்வளவு அழுத்தம் நிறைந்த போட்டியில் விராட் கோலி சதம் விளாசியதைப் பார்க்கிறேன். விராட் கோலி ரன்கள் எடுக்க ஓடுவது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது. 50 ஓவர் ஃபீல்டிங் செய்த பிறகு ஒருவரால் எப்படி இவ்வளவு வேகமாக ஓட முடிகிறது என ஆச்சரியமாக இருந்தது. அதுவே அவரது உடல் தகுதிக்கான சான்று என்றார்.
இதையும் படிக்க: கவர் டிரைவ் எனது பலவீனம், ஆனால்… விராட் கோலி கூறியதென்ன?
விராட் கோலி 96 ரன்களில் விளையாடிக் கொண்டிருக்கையில், இந்திய அணியின் வெற்றிக்கு வெறும் இரண்டு ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன. அப்போது, இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விராட் கோலியை சிக்ஸர் அடித்து போட்டியை முடிக்குமாறு சைகை செய்ததும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இறுதியில், விராட் கோலி பவுண்டரியுடன் இந்திய அணியின் வெற்றிக்கான ரன்களையும், தனது சதத்தினையும் பூர்த்தி செய்தார். அவர் 111 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து களத்திலிருந்தது குறிப்பிடத்தக்கது.