மும்பை: டிஜிட்டல் கைது என்று கூறி மோசடியாளர்கள் மக்களை ஏமாற்றுவது குறித்து நாள்தோறும் செய்திகள் வெளியாகி வரும் நிலையில், 77 வயது பெண்மணியை ஏமாற்றி, ஒரு மாதத்துக்கும் மேல் டிஜிட்டல் காவலில் வைத்து ரூ.3.8 கோடி மோசடி செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மோசடியாளர்கள், தங்களை சட்டத் துறை அதிகாரிகள் போல காட்டிக்கொண்டு, போலியாக பண மோசடி வழக்குத் தொடர்ந்துவிடுவோம் என்று மிரட்டி, ஒரு மாத காலத்துக்கும் மேல், அப்பெண்மணியை டிஜிட்டல் காவலில் வைத்திருந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டபோதுதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
புகார் கொடுத்திருப்பவர், மும்பைச் சேர்ந்தவர். தனது ஓய்வுபெற்ற 75 வயது கணவருடன் வாழ்ந்து வருகிறார். இவர்களது பிள்ளைகள் வெளிநாடுகளில் வாழ்கிறார்கள்.
இது குறித்து பதிவு செய்யப்பட்டிருக்கும் புகாரில், அப்பெண்மணிக்கு வாட்ஸ்ஆப் காலில் அழைப்பு வந்திருக்கிறது. அதில் பேசியவர்கள் சட்டத் துறை அதிகாரிகள் போலவும், அப்பெண்மணி பெயரில் தைவானுக்குச் சென்ற பார்சல் ஒன்று பிடிபட்டிருப்பதாகவும் அதில் 5 பாஸ்போர்ட்டுகள், வங்கிக் கணக்குப் புத்தகம், 4 கிலோ துணிகள், போதைப் பொருள்கள் இருந்ததாகவும் அவை பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.