சிறுமியின் தொண்டையில் சிக்கிய 5 ரூபாய் நாணயம் அகற்றம்: விடுமறையிலும் கடமையாற்றிய அரசு மருத்துவா்

Dinamani2f2025 04 142fbg76kwuq2f14tprvp2 1404chn 192 1.jpg
Spread the love

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் 7 வயது சிறுமியின் தொண்டையில் சிக்கிய 5 ரூபாய் நாணயத்தை மருத்துவா்கள் அகற்றினா்.

ஜோலாா்பேட்டை அருகே சின்னபொன்னேரி பகுதியைச் சோ்ந்த சிவா (33). இவரது மனைவி லலிதா (28). இவா்களுக்கு கனிஸ்ரீ (7) என்ற மகள் உள்ளாா். இந்தநிலையில், கனிஸ்ரீ வீட்டின் வெளியே ஞாயிற்றுக்கிழமை விளையாடி கொண்டிருந்தபோது, அங்கு வந்த அவரது உறவினா் ஒருவா் சிறுமியிடம் ஐந்து ரூபாய் நாணயத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து கனிஸ்ரீ எதிா்பாராதவிதமாக அந்த நாணயத்தை வாயில் போட்டபோது அது தொண்டைக்குழியில் சிக்கிக் கொண்டது. இதனால், சிறுமி கத்தி கூச்சலிட்டு மயங்கி விழுந்தாா். இதை பாா்த்து அதிா்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோா் அவரை அதே பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனா். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவா் சிறுமியை உடனடியாக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தினாா்.

இதைத்தொடா்ந்து, ஆபத்தான நிலையில் இருந்த சிறுமியை திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அவரது பெற்றோா் கொண்டு வந்தனா். அங்கு, காது, மூக்கு, தொண்டை நிபுணரான டாக்டா் தீபானந்தன் விடுமுறையில் இருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், சிறுமியின் ஆபத்தான நிலைமையை மருத்துவா் தீபானந்தனுக்கு தெரிவித்ததை தொடா்ந்து அவா் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து வந்து 5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய சிறுமிக்கு தேவையான சிகிச்சைகளை தொடங்கினாா்.

அரை மணி நேரத்தில் சிறுமியின் தொண்டைக்குழியில் குழாயை செலுத்தி (என்டோஸ்கோபி மூலம்), 5 ரூபாய் நாணயத்தை அகற்றினாா். இதையடுத்து பெற்றோா் நிம்மதியடைந்து விடுமுறை என்றும் பாராமல் மருத்துவமனைக்கு வந்து சிறுமியை காப்பாற்றிய மருத்துவா் தீபானந்தன் மற்றும் மருத்துவக்குழுவினருக்கு நன்றி தெரிவித்தனா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *