கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வு என்றும் தமிழக மீனவர்கள் விவகாரத்தில் பாரபட்சம் ஏன்? என்றும் தவெக தலைவர் விஜய் கேள்வியெழுப்பியுள்ளார்.
தமிழக மீனவர்களை காப்பாற்ற கச்சத்தீவை மீட்பதே நிரந்தரத் தீர்வு என்று முதல்வர் ஸ்டாலின் புதன்கிழமை பேரவையில் தெரிவித்திருந்தார். இதற்கென தனித்தீர்மானம் போடப்பட்டு சட்டப் பேரவையில் புதன்கிழமை முன்மொழியப்பட்டது. இதற்கு பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் க்டடிதம் இன்றை எழுதியுள்ளார்.
தாய்லாந்து சென்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து இன்று மாலை இலங்கை செல்லவிருக்கிறார். இதனால், அவர் கச்சத்தீவு விவகாரம் குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இதுபற்றி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை, “ கச்சத்தீவு மீட்கப்படுவதே மீனவர்கள் பாதுகாப்புக்கான நிரந்தரத் தீர்வு. ஐ.நா.வின் கடல்சார் சட்டப் பிரகடனத்தை இலங்கை அரசு எப்போதும் மதித்துக் கடைப்பிடிக்க வேண்டும். மீனவர்களின் உயிரையும் உணர்வையும் பாதுகாப்பதே மத்திய மற்றும் மாநில அரசுகளின் தலையாய கடமை.
மீனவர்கள் நலன் மற்றும் கச்சத்தீவு சார்ந்த தமிழக வெற்றிக் கழகப் பொதுக்குழுத் தீர்மானம் தந்த அழுத்தம், தமிழ்நாடு அரசைத் தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடான கச்சத்தீவு மீட்பு மற்றும் மீனவர் பாதுகாப்பு நிலைப்பாடு நோக்கி நகர வைத்துள்ளது.
1974-ல் கச்சத்தீவு கைவிட்டுப் போகக் காரணம், ஆட்சி அதிகாரப் பசி கொண்ட அன்றைய ஆளும்கட்சியான தி.மு.க.தான். 1999 ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை மத்திய அரசுகள் இயங்கியதே தி.மு.க.வின் தயவினால்தான். அத்தகைய நிலையில், அப்போதெல்லாம் கச்சத்தீவு விவகாரத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, இப்போது மட்டும் தனித் தீர்மானம் என்ற கண்துடைப்பு நாடகம் ஏன்? இந்தக் கேள்வியே தமிழக மக்களிடமும் எழுந்துள்ளது.
அன்று முதல் இன்றுவரை மத்திய அரசுக்கு, வாஞ்சையோடு வருடிக் கொடுத்து, மறைமுக அன்பை வெளிப்படுத்தும் கடிதம் எழுதும் கபட நாடகம் மட்டுமே இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசின் மாயாஜால வித்தை. அதிகார மையமாக இருக்கும்போதெல்லாம் கை விட்டுவிட்டு, 2026 சட்டபேரவைத் தேர்தல் நெருங்குவதால், இப்போது தனித் தீர்மானம் இயற்றும் கபட நாடகத் தி.மு.க. அரசின் அந்தர் பல்டி அரசியலைத் தமிழக வெற்றிக் கழகம் கடுமையாகக் கண்டிக்கிறது.