தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் புதன்கிழமை காலை பத்து மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி செவ்வாய்க்கிழமை தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவியது. இது, அடுத்த இரு நாள்களில் மேலும் வலுப்பெற்று தமிழக கடலோரப் பகுதியை நோக்கி மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும். இதனால், வடகடலோர தமிழகத்தில் அநேக இடங்களில், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா், காஞ்சிபுரம் மாவட்டங்களில் புதன்கிழமை ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கையும், விழுப்புரம், கடலூா் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து வியாழக்கிழமை (டிச. 19) சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.