அக்.27-ல் புயலாக வலுவடைகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் அக்.28 வரை கனமழை வாய்ப்பு | Tamilnadu weather update

Spread the love

சென்னை: வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாகவும், இது அக்டோபர் 27-ம் தேதி புயலாக வலுப்பெறக் கூடும் என்றும், இதன் காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் நாளை (அக்.25) முதல் 28-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது, மேற்கு – வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து, நாளை (அக்.25) தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். பின்னர், 26-ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 27-ம் தேதி காலை, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் புயலாகவும் வலுவடையக்கூடும்.

அரபிக் கடலில் நிலவும், காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை வடக்கு – வட கிழக்கு திசையில் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளை கடந்து நகரக்கூடும். இதன் காரணமாக நாளை முதல் 27-ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், 28 முதல் 30-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் நாளை (அக்.25) கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும், 26-ம் தேதி விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். 27-ம் தேதி திருவள்ளூர், சென்னை மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யகூடும். 28-ம் தேதி திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக கடலோரப் பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளையும், நாளை மறுதினமும் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனே கரைக்கு திரும்ப வேண்டும்.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டில் 15 செமீ, திருநெல்வேலி நாலுமுக்கில் 12 செமீ, ஊத்தில் 11 செமீ, ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் 10 செமீ, கன்னியாகுமரி மாவட்டம் பாலமோர், பேச்சிப்பாறை, சென்னை மேடவாக்கத்தில் தலா 9 செமீ, திருநெல்வேலி மாவட்டம் காக்காச்சியில் 8 செமீ, திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு, திருத்தணி, கன்னியாகுமரி மாவட்டம் சிற்றாறு, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை, புத்தன் அணை ஆகிய இடங்களில் தலா 7 செமீ மழை பதிவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *