தன்னை ஒரு பொருட்டாகவே மதிக்காத தாயின் நிழலில் தஞ்சம் கொண்ட மகனாக பரணி உடையும் இடம்… அப்போது ஒவ்வொரு கதாபாத்திரத்திற்குள்ளும் இருக்கும் கறுப்பு – வெள்ளைப் பக்கங்கள் வெளியாவதைப் படமாக்கிய விதம் போன்றவற்றால் உச்சம் தொடுகிறது மேக்கிங்!
மூன்று தலைமுறை பெண்களுக்கு நடுவில் இருக்கும் இடைவெளியை ஆண் ஆதிக்கம், பாசம், காதல் ஆகிய நுண்ணிய உணர்வுகளால் நிரப்பி அதை உரையாடலுக்கும் உட்படுத்துகிறது எழுத்து.
அதோடு பின்காலனியம், உலகமயமாக்கல் ஆகியவற்றைத் தாண்டி ‘விருப்பம், தேர்வு’ என்ற புள்ளியில் பிடிவாதமாக நிற்கிற பெண்ணின் குணத்தைக் கச்சிதமாகப் பதிவுசெய்திருக்கிறது திரைமொழி.
அதேபோல ‘உச்சிமலை காற்று – காணாமல் போகும் மனிதர்கள்’ என்று ஆரம்பத்தில் சொல்லப்பட்ட வாய்மொழிக் கதையை க்ளைமாக்ஸில் இணைத்த விதமும் அழகு!
இருப்பினும் ஒரு புள்ளியில் முடிந்துவிட்ட இறுதிக் காட்சியை இத்தனை நீட்டியிருக்க வேண்டுமா என்கிற கேள்வியும், வட்டார வழக்கில் ஆங்காங்கே ஏற்படும் குழப்பங்களும் படத்தின் தன்மையைச் சிதைக்கின்றன.

புதுமையான திரைமொழி என்றாலும், தொடக்கமும் முடிவும் இல்லாத சில காட்சியமைப்புகள், முக்கியமான தருணங்களைச் சொல்லவரும் காட்சிகளை இன்னுமே அழுத்தமாகப் பதிவு செய்யாதது போன்றவை ஏமாற்றமே!
குறைகள் இருப்பினும் தொழில்நுட்ப ரீதியாகவும், திரைக்கதையாகவும் நல்ல தரத்தில் உருவாகியிருக்கும் இந்த ‘அங்கம்மாள்’, நம் கலை ரசனையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் முக்கியப் படைப்பாக மனதில் வந்து அமர்கிறாள்.