சீராளன் கறிக்குழம்பு
தேவையானவை:
தட்டைப்பயிறு (காராமணி) – 100 கிராம்
பாசிப்பயிறு (பச்சைப்பயிறு) – 100 கிராம்
கடலைப்பருப்பு – 50 கிராம்
சின்ன வெங்காயம் – 10 (நறுக்கிக்கொள்ளவும்)
தக்காளி – 2 (நறுக்கிக்கொள்ளவும்)
பச்சை மிளகாய் – 2 (நறுக்கிக்கொள்ளவும்)
கறிவேப்பிலை – சிறிதளவு
தேங்காய்த் துருவல் – 3 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு – 5
நசுக்கிய பூண்டு – 5 பற்கள்
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
சோம்பு – அரை டீஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 3 டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் – 2 டேபிள்ஸ்பூன்
சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்
சோம்புத்தூள் – ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:
தட்டைப்பயிறு, பாசிப்பயிறு, கடலைப் பருப்பு மூன்றையும் எட்டு மணி நேரம் ஊறவைத்து கொரகொரப்பாக இட்லி மாவுப் பதத்துக்கு அரைத்து உப்பு சேர்த்து கரைத்துக்கொள்ளவும். பின்னர் மாவை இட்லி போல் ஊற்றி வேகவைத்து அவற்றை சதுரத் துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும். தேங்காய்த்துருவல், முந்திரியை அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி சோம்பு, கடுகு, உளுத்தம்பருப்பு ஆகியவற்றைத் தாளிக்கவும். பின்னர் வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்னர் இதில் தக்காளி, பச்சை மிளகாய், நசுக்கிய பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பிறகு இத்துடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கிளறவும்.
இத்துடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குழம்புப் பதத்தில் கொதிக்க விடவும். பிறகு வேகவைத்து நறுக்கிய துண்டுகளைக் கலவையில் சேர்க்கவும். கடைசியாக இதனுடன் அரைத்துவைத்துள்ள தேங்காய் மற்றும் முந்திரி விழுதைச் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.
முன்பெல்லாம் புன்செய் நிலத்தில் மட்டுமே காராமணி பயிரிடப்பட்டு வந்தது. இப்போது நீர்ப்பாசனம் செய்தும் பயிரிடப்படுவதால் ஆண்டு முழுவதும் காராமணி கிடைக்கிறது.