சென்னை: இந்தோ – ஜப்பான் தொழில் வர்த்தக சபையின் ஜப்பானிய மொழிப் பள்ளி சார்பில் இந்திய – ஜப்பான் 15 கல்லூரி மாணவர்கள் இடையே நடைபெற்ற போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் நேற்று நடைபெற்றது. ஜப்பான் துணைத் தூதர் தகாஹாஷி முனியோ, `இந்து’ என்.ரவி ஆகியோர் பங்கேற்று போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
பின்னர் ஜப்பான் துணைத் தூதர் தகாஹாஷி முனியோ கூறியதாவது: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பானிய பிரதமர் இஷிபாஷி ஷிகெரு ஆகியோர் சமீபத்தில் நடந்த உச்சி மாநாட்டில், பொருளாதார மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் மட்டுமல்லாமல், மக்களிடையேயான பரிமாற்றங்கள், கல்வி மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றிலும் ஒத்துழைப்பை வலுப்படுத்து வதற்கான உறுதிப்பாட்டை எடுத்துக்கொண்டனர்.
இதன் ஒரு பகுதியாக, இரு நாட்டுத் தலைவர்களும் இந்தியா – ஜப்பான் இடையேயான மனித ஆற்றல் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புக்கான செயல் திட்டத்தை ஏற்றுக்கொண்டனர். அதன்படி அடுத்த 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் அதிகமான இந்தியப் பணியாளர்கள், மாணவர்களை ஜப்பானுக்கு அழைத்துச் செல்ல விசா வழங்கப்பட உள்ளது.
குறிப்பாக இந்தியாவிலிருந்து 50 ஆயிரம் திறமையான பணியாளர்கள் மற்றும் இளம் தொழில் வல்லுநர்கள் ஜப்பானுக்கு சென்று அந்நாட்டின் தொழில் துறைகளில் பணியாற்றவும், மேம்பட்ட தொழில்நுட்பத் திறன்களைப் பெறவும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக `இந்து’ என். ரவி பேசுகையில், “ஹிட்டாச்சி, சோனி, டொயோட்டா போன்ற ஜப்பானிய நிறுவனங்களும், இந்தியாவின் யோகா மற்றும் திரைப்படங்களும் இரு நாடுகளின் உறவை நெருக்கமாக்கியுள்ள நிலையில், பிரதமர் மோடியின் சமீபத்திய ஜப்பான் பயணம் இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
அதன்படி ஜப்பான் அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவில் ரூ.60 ஆயிரம் கோடியை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது” என்று தெரிவித்தார். இந்நிகழ்வில் இந்தோ – ஜப்பான் தொழில் வர்த்தக சபை தலைவர் எஸ்.பத்மநாபன், முன்னாள் தலைவர் ஆர்.சுகுணா ராமமூர்த்தி, கவுரவ செயலாளர் ஸ்ரீதர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.