நாடு முழுவதும் நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பில் (Census), சீர்மரபினர் (DNT) சமூகத்தினரைத் தனிப் பிரிவாகக் கணக்கிட வேண்டும் என்று கோரி பிரதமர் மோடிக்கு, விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, “பிரதமர் மோடிக்கு இன்று ஒரு முக்கியக் கடிதம் எழுதியுள்ளேன். 1871-ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ‘குற்றப்பரம்பரைச் சட்டம்’ மூலம் பாதிக்கப்பட்ட பிரமலைக் கள்ளர் உள்ளிட்ட சீர்மரபினர், நாடோடி மற்றும் பகுதி நாடோடி (DNT/NT/SNT) சமூகத்தினரைத் தனியாகக் கணக்கெடுக்க வேண்டும் என்பதே அந்தக் கடிதத்தின் நோக்கம்.

இவர்களை வெறும் ஓ.பி.சி, எஸ்.சி பட்டியலோடு சேர்த்து எண்ணுவது சரியாக இருக்காது. 1952-லேயே இவர்களுக்கான உரிமைகளை அரசு முன்னெடுத்தாலும், வரவிருக்கும் சென்சஸில் இவர்களுக்கெனத் தனிப்பகுதியை ஒதுக்க வேண்டும். இல்லையெனில், இந்த மக்களின் சரியான எண்ணிக்கை இல்லாமல் போய்விடும். சாதி வாரிக் கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக இவர்களைத் தனித்துவமாக அடையாளப்படுத்த வேண்டும்.
கரூர் எம்.பி ஜோதிமணி சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, உழைப்பால் உயர்ந்து இரண்டாவது முறையாக எம்.பி-யாக இருக்கிறார். அவர் குறித்து மிகக் கேவலமாகச் சங்கிகள் பேசி வருகிறார்கள். நயினார் நாகேந்திரன் பெண்களைப் பற்றி எப்படி அவதூறாகப் பேசினாரோ, அதே ‘வியாதி’ இப்போது பாஜக மாவட்டத் தலைவர்களுக்கும் ஒட்டியிருக்கிறது.
பெண்களை அசிங்கமாகப் பேசுவது பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ஸின் கலாசாரமாகவே மாறிவிட்டது. ‘புதிய இந்தியா’ என்று பேசும் பிரதமர் மோடி, தனது கட்சியினரின் இந்த இழிவான கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மணிசங்கர் அய்யர் கே.சி. வேணுகோபாலை ‘ரௌடி’ என்று விமர்சித்திருக்கிறார். மணிசங்கர் அய்யருக்கு வயதாகிவிட்டது. அந்த வயோதிகத்தின் காரணமாக ஏற்பட்ட விரக்தியில் பேசுகிறார். அவரைப் பற்றிப் பேசத் தேவையில்லை. காங்கிரஸ் கட்சியில் அண்ணன்-தம்பிக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை, ஆனால் நாங்கள் அனைவரும் ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே தலைமையின் கீழ் ஒற்றுமையாக இருக்கிறோம். பத்திரிகையாளர்கள் இதைச் சிண்டு முடிந்துவிட வேண்டாம்.
ஆட்சியில் பங்கு வேண்டும் என்பது காங்கிரஸ் தொண்டர்களின் விருப்பம். இது குறித்து பிப்ரவரி 17-ம் தேதி தலைமையிடம் பேசிவிட்டுத்தான் வந்துள்ளோம். தமிழகத்தில் இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. எங்களைப் பொறுத்தவரை இது ‘தமிழ்நாடு Vs டெல்லி’ என்பதற்கான போராட்டம். தமிழகத்தின் நன்மைக்காகவும், டெல்லியின் அதிகாரப் போக்கை எதிர்த்தும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான இந்தக் கூட்டணி வரும் தேர்தலில் பெரிய வெற்றியைப் பெறும்.
நான் தினமும் காலையில் ஒரு நல்ல செய்தியைப் போடுவேன், காலை எக்ஸில் ‘அச்சமில்லை அச்சமில்லை’ என்ற பாரதியார் கவிதையைப் போட்டதில் என்ன தவறு? பதவி ராஜினாமா செய்யப்போகிறேன் போன்ற வதந்திகளைப் பரப்பும் ஐ.டி-க்களுக்கு நான் பதில் சொல்லத் தேவையில்லை” என்றார்.