அதன்பிறகுதான், அண்ணாமலைக்கு புதிய பதவி அளிப்பது குறித்து ஆர்.எஸ்.எஸ் சீனியர்களுடன் கலந்தாலோசித்திருக்கிறார் பி.எல்.சந்தோஷ். அதன்படி, தமிழகத்திலுள்ள சக்தி கேந்திரங்களுக்கு பொறுப்பாளராக, ‘சக்தி கேந்திர பிரமுக்’ பதவியில் அண்ணாமலையை நியமிப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு சக்தி கேந்திரத்தின் கீழ், நான்கைந்து வாக்குச் சாவடிகள் வரும். வாக்குச் சாவடிகளையும் தொகுதி நிர்வாகிகளையும் இணைக்கும் பாலமாக சக்தி கேந்திரங்கள் செயல்படுகின்றன. தேர்தல் பிரசாரம் தொடங்கி, களப்பணி வரையில் முக்கிய பங்காற்றும் இந்த சக்தி கேந்திரங்களில், சுமார் 25,000 பேர் தமிழகத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுக்கு பொறுப்பாளராகத்தான் நியமிக்கப்படவிருக்கிறார் அண்ணாமலை.

2015-ம் ஆண்டிலிருந்து கட்சியின் மாநில அமைப்புப் பொதுச் செயலாளராக 11 வருடங்கள் பணிபுரிந்தவர் கேசவ விநாயகம். அவருக்கும் அண்ணாமலைக்கும் இருக்கும் உரசலை பெரிதுப்படுத்தாமல், நீண்டகாலமாக ஒரே பொறுப்பில் இருப்பதால், அவரை நீக்குவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அவரிடத்தில், நாகர்கோவிலைச் சேர்ந்த பிரஷோப குமாரை நியமிக்கவும் முடிவு எடுக்கப்பட்டது. தற்போது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாநிலச் செயலாளராக இருக்கும் பிரஷோப குமார், மார்ச் முதல்வாரத்தில் அமைப்பு பொதுச்செயலாளராக பொறுப்பேற்கவுள்ளார்” என்றனர் விரிவாக.
அமைப்பு பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள கேசவ விநாயகத்துக்கு, சமூக நல்லிணக்க பொறுப்பாளர் பதவியை வழங்கியிருக்கிறது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு. தமிழகத்தில், கிராமங்கள் அளவில் கூட்டங்கள் போட்டு, சமூகங்களுக்கு இடையே நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு அவரை நியமித்திருக்கிறார்கள். இந்த மாற்றங்களில், சக்தி கேந்திர பொறுப்பாளராக அண்ணாமலைக்கு பதவி வழங்கப்படவுள்ளதில், நயினார் நாகேந்திரன் தரப்பு கடும் அப்செட் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.