திமுகவில் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா, அதிமுகவில் திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, வேலுமணி, தவெகவில் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன், நிர்மல் குமார், நாம் தமிழர் கட்சியில் சாட்டை துரைமுருகன், சிவக்குமார், பாத்திமா பர்ஹானா உள்ளிட்ட தலைவர்கள் அவரவர் கட்சியில் இரண்டாம் கட்டத் தலைவர்களாக விளங்குகிறார்கள்.
இவர்களில் யார் அடுத்த தலைவர் என்ற கேள்வி எழுவதற்கு வாய்ப்புண்டு. ஒரு கட்சியில் அடுத்த தலைவராக புதியவர் உருவாகலாம், இரண்டாம் கட்டத் தலைவரே முதன்மைத் தலைவராக மாறலாம்.
அரசியல் வரலாற்றில், இரண்டாம் கட்டத் தலைவர்களாக இருக்கும் பல தலைவர்கள் கட்சியில் முதலிடத்துக்கு வருவார்கள், சில தலைவர்கள் தனியாக கட்சி தொடங்கி முதன்மைத் தலைவராக மாறுவார்கள். சில தலைவர்கள் இரண்டாம் கட்டத் தலைவர்களாகவே தொடர்ந்து இருப்பார்கள். தேசியக் கட்சிகளில் இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கு முக்கியத்துவம் குறைவு. பாஜகவில் வாஜ்பாய், அத்வானி என்றும், நரேந்திர மோடி, அமித்ஷா என்றும் முடிவெடுக்கும் இடத்தில் முதன்மையாக இருந்தார்கள், இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியில் நரசிம்மராவ், மன்மோகன்சிங் பிரதமர் ஆனார்கள். ஆனால், அவர்கள் கட்சியின் முடிவெடுக்கும் இடத்தில் இருந்து வந்தவர்கள் கிடையாது.

ஒரு கட்சியில் இரண்டாம் கட்டத் தலைவர்களாக இருப்பவர்கள் அரசியல் ஆடுபுலி ஆட்டத்தின் தொடர்ச்சியாக முதன்மை இடத்தைப் பிடித்து விடுவார்கள்.
தமிழ்நாட்டில் அண்ணா ஆட்சி காலத்தில் நெடுஞ்செழியன், கருணாநிதி, மதியழகன் உள்ளிட்ட இரண்டாம் கட்டத் தலைவர்கள் இருந்தார்கள். கருணாநிதி கட்சியின் தலைவராக மாறினார். கருணாநிதி ஆட்சி காலத்தில் பேராசிரியர் அன்பழகன், துரைமுருகன் உள்ளிட்ட இரண்டாம் கட்டத் தலைவர்கள் இருந்தனர். மு.க.ஸ்டாலின் கட்சியின் தலைவராக உயர்ந்தார்.
எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் நெடுஞ்செழியன், ஆர்.எம்.வீரப்பன், எஸ்.டி.சோமசுந்தரம் உள்ளிட்ட இரண்டாம் கட்டத் தலைவர்கள் இருந்தனர். ஜெயலலிதா கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் அதிமுக ஐவர் அணி என்கிற இரண்டாம் கட்டத் தலைவர்களாக இருந்தனர். ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் ஆனார். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆகவும், கட்சியின் தலைவராகவும் மாறினார்.
வைகோ, திருநாவுக்கரசர், வி.கே.சசிகலா, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்ட பலரும் பிரதான அரசியல் கட்சிகளில் இரண்டாம் கட்டத் தலைவர்களாக முடிவெடுக்கும் இடத்தில் இருந்தவர்கள் தான்.