இயக்குநர் பா.இரஞ்சித் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு எதிராக தன் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.
சென்னையில் பகுஜன்சமாஜ் கட்சித் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குன்றத்தூா் திருவேங்கடம், பொன்னை பாலு உள்பட 16 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களில் திருவேங்கடம் என்கவுன்ட்டரில் உயிரிழந்தாா்.
இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவர் இன்று, கைது செய்ப்பட்டுள்ளதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கோரி சென்னை எழும்பூரில் இன்று நினைவேந்தல் பேரணி நடைபெற்று வருகிறது. அதில் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித், நடிகர்கள் மன்சூர் அலிகான், அட்டகத்தி தினேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்வில் பேசிய இயக்குநர் பா.இரஞ்சித், “ஆம்ஸ்ட்ராங் அண்ணன் கொலையில் பல சூழ்ச்சிகள் உள்ளன. இந்தப் படுகொலையை எளிதாகக் கடந்துவிடலாம் என நினைக்காதீர்கள். இது ஒரு எச்சரிக்கை. சென்னையில் எங்களை மீறி யாரும் ஆட்சி செய்ய முடியாது. கிட்டத்தட்ட 40% தலித் மக்கள் இந்த ஊரில் இருக்கிறோம். இப்போது, அரசியலற்று இருக்கலாம். ஒருநாள் இந்த மக்கள் விழித்துக்கொண்டால் அப்போது தெரியும்.
எம்.எல்.ஏ. பதவிக்காக உங்கள் கட்சியில் சேர்ந்த அடிமைகள் இல்லை நாங்கள். இங்கு ஒரு மேயர் இருக்கிறார். அவர் திமுகவில் இருப்பதால் இப்பதவி வழங்கப்படவில்லை. இடஒதுக்கீடுதான் அந்த வாய்ப்பைக் கொடுத்தது. ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராக இருக்கும் கயல்விழி செல்வராஜுக்கும் இந்த துறை உருவாக காரணமாக இருந்தவரே அம்பேத்கர்தான் என புரிய வேண்டும். தலித்களாகிய இவர்கள் இந்தப் பிரச்னையில் ஏன் மௌனம் காக்கிறார்கள்? உங்களால் தைரியமாகக் குரல் கொடுக்க முடியாதா?
ஆம்ஸ்ட்ராங் அண்ணனை ரௌடி எனக் கூறி வலைதளங்களில் எழுதிய அயோக்கியர்கள் யார்? முற்போக்குவாதிகள்தான். திமுக இணையதள பிரிவு (ஐடி) மிகத் தவறாக எழுதினார்கள். அதிராகத்திற்கு எதிராகத் திரண்டால் ரௌடிகள் என்பீர்களா? அப்படி என்றால் நாங்கள் ரௌடிகள்தான். இந்தப் படுகொலையைச் செய்த உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்யும் வரை நாங்கள் ஓயமாட்டோம். காவல்துறை விசாரணையை நம்புகிறோம்” எனக் கூறினார்.