திருநெல்வேலி: அதிக செயற்கைகோள்களை அனுப்பி உள்ளதால், வானிலை குறித்த தகவல்களை மிகத் துல்லியமாக, முன்கூட்டியே பெற முடிகிறது என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) தலைவர் நாராயணன் கூறினார்.
திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளத்தில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்திய வானிலை ஆராய்ச்சிக்கு அதிக அளவிலான செயற்கைகோள்களை அனுப்பி இருக்கிறோம். இதனால், வானிலை குறித்த தகவல்களை மிகத் துல்லியமாக, முன்கூட்டியே பெற முடிகிறது. மீனவர்கள் கடலில் எல்லையை கடக்காமல் இருக்கவும், மீன்கள் அதிகமாக உள்ள பகுதிகளை அறியவும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட இணைய செயலிகளை உருவாக்கி கொடுத்துள்ளோம். அதன் மூலமாக தமிழிலேயே தகவல்களைப் பெற முடியும்.
ககன்யான் திட்டத்துக்காக 80 ஆயிரம் சோதனைகள் நடைபெற்றுள்ளன. இத்திட்டத்தில் முதலில் 3 ஆளில்லா ராக்கெட்களை விண்ணுக்கு அனுப்பி சோதனை செய்த பின்பே, ஆட்களை விண்ணுக்கு அனுப்புவோம். அதற்கான முதல் ராக்கெட் இந்த ஆண்டு இறுதியில் விண்ணுக்கு செலுத்தப்படும். அடுத்த ஆண்டு 2 ராக்கெட்டுகள் ஏவப்படும். விண்வெளியில் இருக்கும் நபர்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், அதிலிருந்து தப்பிக்க ‘க்ரூ எஸ்கேப் சிஸ்டம்’ என்ற பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக சோதித்துள்ளோம்.
உலக அளவில் விண்வெளிக்கு ராக்கெட்களை வணிகப் பயன்பாட்டுக்கு பயன்படுத்துவதில் இந்தியா 2 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. இதை 10 சதவீதமாக உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். தற்போது, 10 ஆயிரம் கிலோ எடை கொண்ட செயற்கை கோள்களை எடுத்து செல்லும் ராக்கெட்களை வெற்றிகரமாக அனுப்பி உள்ளோம். 40 ஆயிரம் கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளை அனுப்புவதற்கு தேவையான ராக்கெட்டுகளை தயாரிக்க அனுமதி கிடைத்துள்ளது. அந்தப் பணியும் நடைபெறுகிறது.ககன்யான் திட்டத்துக்கு, 80 ஆயிரம் கிலோ செயற்கை கொளை சுமந்து செல்லும் ராக்கெட் தயாரிக்க வேண்டும். அதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு நாராயணன் கூறினார்.