கோவை: அதிமுக ஒன்றிணைய நான் கட்சி தலைமைக்கு கெடு விதிக்கவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ நேற்று கோபியிலிருந்து கார் மூலம் கோவை வந்தார். கோவையிலிருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக கோவை விமான நிலையத்தில் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘அதிமுக ஒன்றிணைப்பு குறித்து நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள், விரைவில் நல்லது நடக்கும். அதிமுக ஒன்றிணைய 10 நாள் கெடு விதிக்கவில்லை. பத்து நாட்களில் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும். ஒரு மாதத்திலோ அல்லது ஒன்றரை மாதத்திலோ முடிவெடுக்க வேண்டும் என்று தான் தெரிவித்தேன்.
ஆனால், ஊடகத்தினர் நான் கூறியதை தவறாக புரிந்து கொண்டனர்’’ என்றார். இறுதியாக, ராணுவ கட்டுப்பாடுடன் இருந்த அதிமுக கட்சி இப்போது இப்படி ஆகிவிட்டதே என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, ‘அது உங்கள் கருத்து’ என செங்கோட்டையன் பதில் அளித்தார்.