அதிமுக, தேமுதிக கூட்டணியில் விரிசலா என்ற கேள்விக்கு பிரேமலதா விஜயகாந்த் பதிலளித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் தேமுதிக சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்.
அப்போது அவருக்கு தேமுதிக நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் மிக முக்கியமான மூன்று பிரச்னை என்றால் மும்மொழி கொள்கை, தொகுதி சீரமைப்பு, மீனவர்கள் பிரச்னை. இந்த காலகட்டத்தில் இது மூன்றுதான் முக்கிய பிரச்னையாக உள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் தமிழ் மொழிதான் நம் தாய்மொழி, உயிர்மொழி. நமது தாய்மொழி தமிழக முழுவதும் கட்டாயமாக்கப்பட வேண்டும். எல்லோரும் தமிழ்ப் படிக்கணும் அதுதான் தேமுதிக நிலைப்பாடு.
அன்னை மொழி காப்போம் அனைத்து மொழியும் கற்போம் என்பதுதான் விஜயகாந்தின் வார்த்தை அதுதான் தேமுதிகவின் நிலைப்பாடு.
தமிழகத்தில் மக்களவைத் தொகுதியில் குறைப்பதாக கருத்து இருக்கிறது. ஆனால் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. அதனால் அதைப்பற்றி நான் பேசுவதற்கு எதுவும் இல்லை.
தொடர்ந்து மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருவது தொடர் நிகழ்வாக உள்ளது. மிகவும் மன வேதனையாக இதை பதிவு செய்கிறேன்.