(கூட்டணி வியூகங்கள், வசீகர வாக்குறுதிகள், பிரசார வியூகங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி கட்சிகள் ஆட்சிக்கு வந்த கதைகளை, சமீபத்திய நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்தும் கட்டுரைகளை உள்ளடக்கிய தொடர்தான் ‘வாவ்’ வியூகம்.)
கடந்த காலங்களில் அனுதாப அலைகளை கச்சிதமாகப் பற்றிக் கொண்டு அறுவடை செய்த கட்சிகளை, ஆளுமைகளைப் பற்றிப் பார்த்தோம் அல்லவா? இந்த அத்தியாயத்தில், பழம் நழுவி பாலில் விழுந்தாலும் கூட, விழுந்தது எலுமிச்சம் பழம்போல என்று பாலை திரியவிட்ட கட்சியைப் பற்றியும், கூடவே மக்கள் மத்தியில் மட்டும்தான் அனுதாப அலைகள் ஒர்க் அவுட் ஆகும் என்பதில்லை, கட்சிக்குள்ளேயும் கூட அது பலிக்கும், ஆட்சியையும், அரியணையையும் கைக்குக் கொண்டுவரும் என்று ப்ரூவ் பண்ண ஸ்டாலினையும் பற்றி கொஞ்சம் பேசிக் கலைவோம்.

‘அனுதாப அலை’களை தங்களுக்கு சாதகமாக அறுவடை செய்ய முடியாத அரசியல் குழப்பங்களும், சொதப்பல்களும் கூட தமிழக அரசியலில் அரங்கேறியிருக்கின்றன. அதற்கு அதிமுக சாட்சியாக நிற்கிறது என்று ஏற்கெனவே சுட்டிக்காடியதை இங்கே நிறுவ முயற்சித்தபோது, சிலவற்றை பட்டியலிடுவது அவசியமாகிறது.
அதில் முதலாவது விஷயம், டிச.5, 2016 அன்று தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்த நிகழ்வு. 75 நாட்கள் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோதே, அவர் நலமுடன் திரும்புவார் என்ற நம்பிக்கை மங்கிப் போய்தான் இருந்தது. அதற்கிடையில் அவரை எல்லோரும் கண்ணாடி கூண்டுக்கு வெளியே நின்று பார்த்து வருவதும், பேட்டி கொடுப்பதும் நடந்து கொண்டிருந்தது.
எல்லாம் முடிந்து டிச.5 மாலை அவர் மரணித்தது அதிகாரபூர்வ அறிவிப்பாக வெளியானது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, தேசியத் தலைவர்கள் பலர், பல்வேறு மாநில அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பல்வேறு துறை ஆளுமைகள் என அனைவரும் அவரது உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி ஹாலுக்கு அணிவகுத்திருந்தனர். அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக சார்பில் ஸ்டாலின் கூட வந்திருந்தார்.
ஜெயலலிதா மறைவை தங்கள் வீட்டுத் துக்கமாக அனுசரித்த அக்கட்சியின் கோடிக்கணக்கான தொண்டர்கள் ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா என எல்லோர் மீதும் பரிதாபப்பட்டனர்.