தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள முன்கூட்டியே ஆயத்தமாகி வரும் சூழலில், நடிகரும் தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) தலைவருமான விஜய், தனது கட்சியுடன் முதல் முறையாக சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கத் தயாராகி வருகிறார்.
இந்நிலையில், ஆதவ் அர்ஜுனாவின் புகைப்படத்தை பேனரில் பயன்படுத்தியதற்காக வட்டச் செயலாளரை கட்சியில் இருந்து நீக்கியதாக திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் டிசம்பர் 14-ம் தேதி போரட்டம் நடத்தினர்.
இன்று தவெக அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பனையூரில் நடைபெற உள்ளது. தூத்துக்குடி மாவட்ட செயலாளர் இதுவரை நியமிக்கப்படாமல் உள்ளது. அங்கு இரு பிரிவினருக்கும் இடையே பதவியை கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது.
இன்றைய கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் நியமன அறிவிப்பு வெளியிட பட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. இதனால் அதிருப்தியாளர்கள் பனையூரில் குவிந்துவருவதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. போராட்டம், ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ஈடுபட்டால், அவர்களை கட்சி அலுவலகத்தில் இருந்து அகற்ற பவுன்சர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.
