தூத்துக்குடி தவெக நிர்வாகியான அஜிதா நேற்று திடீரென திமுக-வில் இணைந்திருக்கிறார். இதன் பின்னால் லோக்கல் அமைச்சர் ஒருவரின் தீவிர காய் நகர்த்தலும் கனிமொழியின் விருப்பமும் இருப்பதாக கிசுகிசுக்கின்றனர் விவரமறிந்த வட்டாரத்தினர்.
அஜிதா திமுக-வில் எப்படி இணைக்கப்பட்டார்?

தவெக-வில் மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காத விரக்தியில் பனையூர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விஜய்யின் காரை மறித்து ஆர்ப்பாட்டம் செய்திருந்தார் அஜிதா. சில மாதங்கள் அமைதியாக இருந்தவர், இப்போது திடீரென கனிமொழி முன்னிலையில் திமுக-வில் இணைந்திருக்கிறார்.
தூத்துக்குடியில் முதல்வரின் நிகழ்ச்சியில் அஜிதாவுக்கு முதல் வரிசையில் இருக்கையும் ஒதுக்கப்பட்டிருந்தது. திமுக முகாமுக்குச் செல்ல அஜிதா எப்படி மனம் மாறினார் என்பது குறித்து, அவரின் ஆதரவாளர்கள் சிலரிடம் பேசினோம். “பனையூர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடிய போது, விஜய்க்கு நெருக்கமான சில நிர்வாகிகள் அக்காவை தொடர்புகொண்டு ‘அமைதியாக கலைந்து செல்லுங்கள். பிறகு பேசிக்கொள்ளலாம்’ என்றனர். அதை நம்பித்தான் அக்காவும் அலுவலகத்திலிருந்து கிளம்பி வந்தார். அதன் பிறகு தலைமையிலிருந்து தொடர்புகொண்டு யாருமே என்ன பிரச்னை என்று கேட்கவே இல்லை.

நாங்கள் சென்னைக்கு வந்து பொதுச்செயலாளரையும் முக்கிய நிர்வாகிகளையும் சந்திக்க முயன்றபோதும், அவர்கள் தரப்பு எங்களைச் சந்திக்க மறுத்தனர். என்னவானாலும் கட்சிக்கு உண்மையாக இருக்க வேண்டுமென அக்காவும் அமைதியாக இருந்தார். திடீரென விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கு தூத்துக்குடி தொகுதி கொடுக்கப்படப் போவதாகத் தகவல் வெளியானது. அப்போதும் தொடர்ந்து 10 நாள்கள் சென்னையிலேயே தங்கியிருந்து சிலரைச் சந்திக்க முயன்றோம். போன் அழைப்பைக்கூட யாரும் எடுக்கவில்லை.
கட்சிக்காக இரண்டு ஆண்டுகள் களத்தில் உழைத்ததற்கு இதுதான் பரிசா என அக்கா ரொம்பவே விரக்தியடைந்தார். விஜய் தாஜ் ஹோட்டலில் வேட்பாளர் பட்டியலை வாசித்த போதுதான், நாங்கள் தூத்துக்குடி சென்று கொண்டிருந்தோம். எதையும் நிதானமாகவே கையாள்வோம் என்றே இருந்தோம். அக்காவுக்கு திமுக, அதிமுக, நாதக, சசிகலா அணி பல தரப்பிலிருந்தும் அழைப்பு வந்தது. அதிமுக-வில் செல்லபாண்டியனும் சண்முகநாதனும் அக்காவிடம் பேசிக்கொண்டிருந்தார்கள். எதிர்காலத்தை மனதில் வைத்து அக்காவும் அதிமுக-வுக்குச் செல்லும் மனநிலைக்கு வந்தார்

இந்நிலையில்தான் திமுக தரப்பில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அக்காவுக்கு இருக்கும் சில சங்கடங்களையும் தயக்கங்களையும் உடைத்து இறுதியாக பேசிப் பார்த்தார். அதில் மனம் மாறியதன் காரணமாகத்தான் முதல்வரின் வருகையின்போது அக்கா திமுக-வில் இணைந்தார்” என்கின்றனர்.
தென் மண்டலப் பொறுப்பாளராக இருக்கும் கனிமொழிக்கும் அஜிதா மீது ஒரு கண் இருந்தது. கட்சிக்காக ஆக்டிவாக வேலை செய்யக்கூடிய ஓர் இளம்பெண் கட்சிக்குள் இருந்தால் நன்றாக இருக்கும் என விரும்பினார். தனது எண்ணத்தை லோக்கல் திமுக நிர்வாகிகள் சிலரிடமும் பகிர்ந்திருக்கிறார். இன்னொரு பக்கம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சமூக கணக்குகளின் படி மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த அஜிதா தன் மூலம் கட்சிக்குள் இணைவது திருச்செந்தூரில் தனக்குக் கைக்கொடுக்கும் என காய் நகர்த்தத் தொடங்கினார்.

அமைச்சர் கீதா ஜீவனுக்கு ஆரம்பத்திலிருந்தே அஜிதாவின் இணைப்பில் பெரிய நாட்டமில்லை. ஆனாலும் கட்சியினர் விருப்பத்தால் எந்த முட்டுக்கட்டையும் போடாமல் அமைதியாக இருந்தார். கடந்த வாரம் விஜய்யின் தூத்துக்குடி விசிட்டும் அதற்கு கூடிய கூட்டமும் திமுக-வை கொஞ்சம் கலக்கமடைய வைத்துவிட்டது. அதற்கு செக் வைக்கும் வகையில் முதல்வர் தூத்துக்குடி வரும் அன்றைக்குள் அஜிதாவை திமுக-வில் இணைக்க வேண்டுமென அனிதாவின் டீம் டார்கெட் வைத்து வேலை பார்த்தது. கட்சிக்குள் எந்த சங்கடமும் இல்லாமல் பார்த்துக் கொள்கிறோம். தேவைகளை பூர்த்தி செய்து தருகிறோம் என ஆஃபர்களை முன்வைத்திருக்கின்றனர். ஆனாலும் அஜிதா கடைசி வரை பிடிகொடுக்கவில்லை.
முதல்வர் 4 மணிக்கு தூத்துக்குடிக்கு வரவிருந்த நிலையில், 3 மணிக்குத்தான் தன்னுடைய முடிவை கூறுவேன் எனச் சொல்லிவிட்டார். இதற்கிடையில் அஜிதாவை முதல்வர் முன்னிலையில் இணைத்து அத்தனை முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா? என்று ஒரு கேள்வியும் திமுக முகாமுக்குள் ஓடியிருக்கிறது. பி.டி.செல்வக்குமார் கதையாகிவிடக் கூடாது என முதல்வர் தரப்பு எச்சரிக்க, அதன் பிறகுதான் கனிமொழி முன்னிலையில் அஜிதாவை இணைக்கும் முடிவு எடுக்கப்பட்டது. இதேநேரத்தில், ‘அடுத்த ஆட்சியும் திமுக போலத்தான் தெரிகிறது. ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பில்லாத அதிமுக-வுக்குச் சென்று அதிகாரமில்லாமல் இருப்பதா? இப்போதே நாம் திமுக முகாமுக்குச் சென்றால் ஆட்சியைப் பிடித்த பிறகு லோக்கலில் நமக்கு தேவையானவற்றை சாதித்துக் கொள்ளலாம்’ என அஜிதாவின் ஆதரவாளர்களும் அவரின் மனதை மாற்றியிருக்கின்றனர். இதைத் தொடர்ந்துதான் கனிமொழி முன்னிலையில் திமுக-வில் இணைந்தார் அஜிதா” என மினிட் பை மினிட் ரிப்போர்ட் கொடுக்கின்றனர் உள்விவகாரம் அறிந்தவர்கள்.

அஜிதாவின் வருகையால் மீனவர்களின் வாக்கு தனக்கு சிதறாமல் கிடைக்குமென அனிதா கணக்குப் போடுகிறார். அதிரவைத்த விஜய்யின் தூத்துக்குடி விசிட்டுக்கு ஒரு செக் வைத்திருப்பதாக கனிமொழி நினைக்கிறார். ‘நோ கமென்ட்ஸ்’ மனநிலையில் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறார் அமைச்சர் கீதா ஜீவன். ‘அவர் ஒரு துரோகி’ என அஜிதாவை கடுமையாக விமர்சித்துக் கொண்டிருக்கின்றனர் தவெக-வினர். இறுதி நிமிட கட்சித்தாவல் காட்சிகளால் தகிக்கிறது தூத்துக்குடி அரசியல் களம்.