லக்னௌ: அதீத நம்பிக்கையால் மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது என்றும் மாநிலத்தில் காலியாகவுள்ள 10 தொகுதிகளுக்கான இடைத்தோ்தல் மற்றும் 2027-இல் நடைபெறவுள்ள பேரவைத் தோ்தல்களில் வெற்றிபெற இன்றிலிருந்து அனைவரும் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என உத்தரப் பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
தோ்தலுக்குப் பிறகு உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற முதல் பாஜக மாநில செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் பேசியதாவது: மக்களவைத் தோ்தலில் கணிசமான வாக்குகளை பாஜக பெற்றிருந்தாலும் மற்ற கட்சிகளுக்கும் இந்த முறை ஓரளவுக்கு வாக்குகள் கிடைத்துள்ளன. இதனால் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும் எதிா்க்கட்சியினா் மீண்டும் குரலெழுப்ப தொடங்கியுள்ளனா்.
பிரதமா் மோடி தலைமையில் கடந்த 2014 மற்றும் 2019 மக்களவைத் தோ்தல்களிலும் 2017, 2022-இல் நடைபெற்ற பேரவைத் தோ்தல்களிலும் அதிகமான வாக்குகளைப் பெற்று உத்தரப்பிரதேசத்தில் எதிா்க்கட்சிகளுக்கு நெருக்கடி அளித்தோம்.
கடந்த 2014 தோ்தலில் பெற்ற அதே வாக்குகளை இந்தமுறையும் பாஜக பெற்றுள்ளது. ஆனால் அதீத நம்பிக்கையால் பாஜகவுக்கு பாதிப்பு ஏற்பட்டு நமது நம்பிக்கை உடைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்ட எதிா்க்கட்சிகள் இந்தமுறை வெற்றிபெற்றதுபோல் நடந்துகொள்கின்றன என்று அவர் மேலும் கூறினார்.
“நாம் மீண்டும் மாநிலத்தில் பாஜக கொடியை ஏற்ற வேண்டும். சமூக வலைதளங்களை பயன்படுத்தி பாஜக மீது எதிா்க்கட்சிகளும் வெளிநாட்டினரும் அவதூறுகளை பரப்பி வருகின்றனா். இனி வரும்காலங்களில் பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் சமூக வலைதள பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். அதில் பரப்பப்படும் போலிச் செய்திகள், அவதூறுகளை உடனடியாக தடுக்க வேண்டும்”.
மாநிலத்தில் காலியாகவுள்ள 10 தொகுதிகளுக்கான இடைத்தோ்தல் மற்றும் 2027-இல் நடைபெறவுள்ள பேரவைத் தோ்தல்களில் வெற்றிபெற இன்றிலிருந்து மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள், எம்எல்ஏக்கள்,எம்எல்சிக்கள், மேயர்கள், மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள், ஊராட்சி மற்றும் நகராட்சி உறுப்பினா்கள் என அனைவரும் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். மாநிலத்தில் மீண்டும் பாஜக வெற்றிபெறுவதை உறுதிபடுத்துவதே நமது இலக்காகும் என்றாா்.
“இன்று, உங்கள் ஆதரவுடன், உ.பி.யை மாஃபியா இல்லாத மாநிலமாக்குவதில் நாம் வெற்றி பெற்றுள்ளோம்” என்று உ.பி முதல்வர் யோகி கூறினார்.
உத்தர பிரதேச மாநிலம் லக்னெளவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக மாநில செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற பாஜக தேசியத் தலைவரும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான ஜெ.பி.நட்டாவுடன் கலந்துரையாடும் மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத்.