இதுபற்றி, திருச்சி மாவட்ட அரசியலை உன்னிப்பாகக் கவனித்து வரும் விவர புள்ளிகள் சிலரிடம் பேசினோம்.
“”தி.மு.க கூட்டணியில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளைக் கேட்போம்’ என்று இரு கம்யூனிஸ்ட்களும் ஒரே குரலாகக் கோரிக்கை குரல் எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில், அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் தொகுதிகளைத் தங்களுக்குக் கேட்க வேண்டும் எனத் தீர்மானமும் நிறைவேற்றி இருப்பதாகச் சொல்கிறார்கள்.
திருச்சியில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழுக் கூட்டத்தில் திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம் ஆகிய தொகுதிகளை இம்முறை தி.மு.க-விடம் கேட்டுப் பெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி தலைமைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
இதேபோல், மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டக்குழுக் கூட்டத்தில் திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய தொகுதிகளைக் கேட்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றி மாநிலக் குழுவுக்கு அனுப்பியதாகச் சொல்கிறார்கள்.
இதில், திருச்சி மேற்கு அமைச்சர் கே.என்.நேருவின் தொகுதி. திருவெறும்பூர் அமைச்சர் அன்பில் மகேஸின் தொகுதி. கே.என்.நேரு திருச்சி மேற்கு தொகுதியில்தான் வரும் தேர்தலிலும் போட்டியிடப் போவதாகச் சொல்கிறார்கள்.
கடந்த பொங்கலின்போதே கட்சி நிர்வாகிகளுக்கும், வாக்காளர்களுக்குப் பரிசுப்பொருள் கொடுத்தார். அதை வைத்தே அமைச்சர் மறுபடியும் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடப் போவது உறுதி என்ற பேச்சு கிளம்பியது.

அதேபோல், ஆரம்பத்தில் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சி கிழக்கு தொகுதிக்கு வரும் தேர்தலில் மாறப்போகிறார், சென்னையில் ஒரு தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்றெல்லாம் பல தகவல்கள் உலாவரத்தொடங்கின. ஆனால், அவரும் ஏற்கெனவே கடந்த இரண்டு தேர்தல்களாக நின்று வெற்றிபெற்ற திருவெறும்பூர் தொகுதியிலேயே இந்தமுறையும் நிற்க முடிவெடுத்து, அதற்கான பூர்வாங்க வேலைகளைச் செய்ய ஆரம்பித்துவிட்டதாக அவரது ஆதரவாளர்கள் மட்டத்தில் சொல்கிறார்கள்.
இந்த நிலையில்தான் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் இரண்டு அமைச்சர்களின் தொகுதிகளையும் தத்தமது கட்சிகளுக்குக் கேட்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி பரஸ்பரம் தங்கள் மாநிலக்குழுவுக்கு அனுப்பியிருக்கிறார்களாம். இது, இரண்டு அமைச்சர் தரப்பையும், திருச்சி மாவட்ட தி.மு.க-வினர்களையும் அதிர வைத்திருக்கிறது” என்றார்கள்.