`அந்த நீண்ட சீட்டும் ஒற்றை முத்திரையும்.!’ வாக்குச்சீட்டும் வாக்காளரின் கையில் இருந்த ஜனநாயகமும்! | The series on old election practices part six on ballot paper

Spread the love

இந்த வேட்பாளர் பெருக்கம் காரணமாக இந்தியத் தேர்தல் ஆணையத்துக்குப் பல்வேறு நிர்வாக சிக்கல்கள் ஏற்பட்டன. நீளமான வாக்குச் சீட்டை அச்சடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதோடு, வாக்காளர்கள் தங்களது வாக்குகளைச் செலுத்திய பின்னர், அதனைப் போட வேண்டிய பெட்டிகளை, வழக்கத்தைவிட பெரிதாக வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் எழுந்தது. இதனால், கூடுதல் செலவுகளும் சிரமங்களும் ஏற்பட்டன. 

இந்த நீளமான வாக்குச்சீட்டு , தேர்தல் ஆணையத்துக்கு மட்டுமல்லாது, வாக்காளர்களுக்குமே, குறிப்பாக முதியவர்கள் மற்றும் முதல் முறை வாக்களிப்பவர்களுக்கு, சிரமத்தைக் கொடுத்தது. தாங்கள் விரும்பிய வேட்பாளரின் பெயரையோ அல்லது சின்னத்தையோ சரியாக தேர்வு செய்வது, முத்திரையைத் துல்லியமாக குத்துவது, தவறு ஏற்படாமல் கவனிப்பது என அனைத்தும் முக்கியமான செயல்களாக மாறின. முத்திரை சற்று விலகி, அருகில் உள்ள வேட்பாளரின் பெயரின் கட்டத்தில் பட்டுவிட்டால், அந்த வாக்குச் செல்லாத வாக்குகளாகிவிடும். எனவே, மிக கவனத்துடன் வாக்களிக்க வேண்டிய தேவை இருந்தது. 

எந்த ஒரு தேர்தலிலும், வாக்குப்பதிவு நாளைவிட வாக்கு எண்ணிக்கை அன்றே கூடுதல் பரபரப்பும் பதற்றமுமாக இருக்கும். இன்றைய மின்னணு வாக்குப் பதிவு இயந்திர வருகைக்குப் பின்னர், காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கினால், தபால் வாக்குகளைத் தொடர்ந்து, முதல் மற்றும் இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கையின் நிலவரம் காலை 10 அல்லது 11 மணிக்குள் வெளியாகி, குறிப்பிட்ட தொகுதியின் வேட்பாளரின் வெற்றி/தோல்வியின் போக்கு எப்படி இருக்கும் என்பதை உணர்த்திவிடுகிறது. நண்பகல் 12 மணி அளவிலேயே பெரும்பாலும் வாக்கு எண்ணிக்கை முடிவு ஓரளவு உறுதியாகி விடுகிறது.

ஆனால், வாக்குச் சீட்டின் அடிப்படையில் நடைபெற்ற தேர்தலின்போது, வாக்கு எண்ணிக்கையின் முடிவு தெரிய இரண்டு நாளாகிவிடும். வாக்குப் பெட்டிகள் கடும் கண்காணிப்பில் திறக்கப்பட்டு, சீட்டுகள் 50 அல்லது 100 என்கிற எண்ணிக்கையால் தனித்தனியாக கட்டப்பட்டு, சந்தேகமான வாக்குகள் தனித்தனியாக ஆய்வு செய்யப்பட்டன.

அதிக வேட்பாளர்கள் போட்டியிட்ட தேர்தல்களில், வாக்கு எண்ணிக்கை பல சுற்றுகளாக நீடிக்கும். ஒவ்வொரு சுற்றிலும் முன்னிலை மாறிக் கொண்டே இருக்கும். நீளமான வாக்குச்சீட்டுகள் இருந்த தொகுதிகளில் முடிவுகள் தாமதமாகத்தான் தெரியவரும். இதனால், வேட்பாளர்கள், கட்சித் தலைமை, கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என ஒவ்வொரு தரப்பினருக்குமே வாக்கு எண்ணிக்கையைத் தெரிந்துகொள்வதில் பதற்றமும் எதிர்பார்ப்பும் அதிகரிக்கும்.

குறிப்பிட்ட பெட்டியில் எண்ணப்பட்ட வாக்கு எண்ணிக்கை குறித்து, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளாக அமர்ந்திருக்கும் முகவர்களில் ஒருவர், ஏதாவது சந்தேகம் கிளப்பிவிட்டாலோ, அந்தப் பெட்டியில் போடப்பட்ட வாக்குகள் மீண்டும் எண்ணப்படும். இதனால், விடிய விடிய எண்ணினாலும், அனைத்து வாக்குகளையும் எண்ணி முடிக்க மூன்றாவது நாள் காலையும் ஆகிவிடுவது உண்டு. அந்த இடைவெளியில், வதந்திகள் பரவும்; அரசியல் பதற்றம் உச்சம் அடையும்.

என்றாலும், வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதல் நாளன்று மாலைக்குள், முடிவு எப்படி இருக்கும் என்பது ஓரளவு தெரிந்துவிடும். சில நேரங்களில், குறிப்பிட்ட வாக்குச்சாவடிக்கு உட்பட்ட பகுதியின் வாக்குகளை எண்ணும்போது, கடைசி நேரத்தில் சில நூறு வாக்குகள் வித்தியாசத்தில் தேர்தல் முடிவு எதிர்பாராதவிதமாக மாறிவிடுவதும் உண்டு.முடிவுக்கு வந்த வாக்குச் சீட்டு முறை 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *