சென்னை: கோலாகலமாக கொண்டாடப்படும் தீபாவளி திருநாளில், அனைவரது வாழ்விலும் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகட்டும் என ஆளுநர், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி: இருள் மீது ஒளியின் வெற்றியையும், தீமை மீது நன்மையின் வெற்றியையும், அறியாமை மீது ஞானத்தின் வெற்றியையும் தீபாவளி கொண்டாட்டம் குறிக்கிறது. அன்னை லட்சுமி நமக்கு மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் வளத்தை நல்கி, அன்பு மற்றும் இணக்கமான சமூகத்தைவளர்க்க அருள்புரியட்டும்.
மத்திய இணையமைச்சர் எல்.முருகன்: தீபாவளி திருநாளில் அனைவரும் நல்ல உடல் நலத்தோடு வாழவும், எல்லோரது இல்லத்திலும் இன்பமும் மகிழ்ச்சியும் பெருகட்டும். தமிழக மக்களின் துயரங்களுக்கு தீர்வு ஏற்பட அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலுக்குப் பின், நல்லாட்சி மலர பிரார்த்திப்போம்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: தீபாவளி திருநாளில் நாடெங்கும் அன்பும், அமைதியும் தழைக்கட்டும். துன்பங்கள் கரைந்து ஒளிமயமான எதிர்காலம் பிறக்கட்டும். அனைவரது வாழ்விலும் வளமும், நலமும் பெருகட்டும்.
தமிழக காங்கிரஸ் தலைவர்செல்வப்பெருந்தகை: தீமையை வதம் செய்த தீபாவளித் திருநாளில் வகுப்புவாத சக்திகள் வீழ்த்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் வகையில் தீபாவளி திருநாளை கொண்டாடுவோம்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: வாழ்கையின் இருளை நீக்கி ஒளியை அளிக்கும் தீபாவளியை கோலாகலமாக கொண்டாடும் அனைவருக்கும் மனமார்ந்த தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: இல்லாமை எனும் இருள் விலகி, இன்ப ஒளி பிரகாசித்து, இல்லங்களிலும், உள்ளங்களிலும் அன்பும், ஆனந்தமும் செழிக்கட்டும்.
பாமக தலைவர் அன்புமணி: இருளை விலக்கி, ஒளி கொடுக்க வரும் தீபாவளி திருநாளை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: தமிழக மக்களுக்கு சுமைகள், தீமைகள் நீங்கி, நன்மைகள் நிறைந்து, இன்பங்கள் மிகுந்து, வாழ்வு சிறக்கும் வகையில் தீபாவளி திருநாள் அமையட்டும்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: தீமைகளை அழித்து, நன்மைகளை பெருக்கும் தீபாவளி திருநாள், மக்கள் அனைவருக்கும் நல்லதொரு எதிர்காலத்தை கொடுக்கும் நாளாக அமைய தீபாவளி வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.
பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன்: அறியாமை, அச்சம் போன்ற இருளை நீக்கி, அறிவும், தெளிவும் பெற்று அமைதி, மகிழ்ச்சியுடன் அனைவரும் வாழ தீபாவளி வாழ்த்துகள்.
மேலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன்: தீபாவளி திருவிழாவை மனித நேயத்தை வளர்க்கும் மனவெளிச்சத்தை தரும் விழாவாக ஆசிப்போம். எல்லோரையும் நேசிப்போம்.
இதேபோல் தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை, ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து, விஜய் வசந்த் எம்.பி., முன்னாள் எம்.பி.க்கள். சரத்குமார், சு.திருநாவுக்கரசர், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர், மஜக தலைவர் தமிமுன் அன்சாரி, கிறிஸ்தவ மதச்சார் பற்ற கட்சி தலைவர் மார்டின் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.