இருக்கிற இடம் தெரியாதபடி ஒரு குழந்தை இருந்தால், `சமத்து’ என்பார்கள். அதுபோல, கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் `இப்படியொரு மந்திரி இருந்தாரா?’ என்பதே தமிழகத்தில் பலருக்குத் தெரியாது.
அப்படியிருந்தும், தொழிலாளர் நலத்துறை அமைச்சராக ஐந்து வருடங்களை அசால்ட்டாகக் கடந்தவர்தான் திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள வாணியம்பாடி தொகுதியைச் சேர்ந்த நிலோஃபர்.
பக்கத்து தொகுதியான ஜோலார்பேட்டையைச் சேர்ந்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும் திருப்பத்தூர் மாவட்டச் செயலாளருமான கே.சி.வீரமணியுடன் நீடித்த மோதல் காரணமாகவே, 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது வாணியம்பாடி தொகுதியில் மீண்டும் சீட் எதிர்பார்த்த நிலோஃபருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.
இதனால் ஏற்பட்ட கோபத்தில், “தி.மு.க-வின் பொதுச்செயலாளர் துரைமுருகனுடன் கே.சி.வீரமணி `மாமா… மச்சான்’ உறவில் பழகுகிறார்’’ என்று பொதுவெளியில் பேட்டி கொடுத்து, பெரும் சர்ச்சையைக் கிளப்பினார் நிலோஃபர்.
இதையடுத்து, 2021 மே 21-ம் தேதி அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிலோஃபரை நீக்கினார் எடப்பாடி பழனிசாமி.

இதைத்தொடர்ந்து, லைம்லைட்டில் இல்லாமலிருந்துவந்த நிலோஃபர் 2024 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில்தான் தலைகாட்டினார்.
அப்போது, தி.மு.க சார்பாக மீண்டும் களமிறங்கிய கதிர் ஆனந்துக்காக வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதிக்குள் வேலை செய்யவும் ஆர்வம் காட்டினார் நிலோஃபர். ஆனால், வாணியம்பாடி தி.மு.க நகரச் செயலாளர் வி.எஸ்.சாரதிகுமாருடன் ஏற்கெனவே நிலோஃபருக்கு இருந்த முட்டல், மோதலாலும்… பொதுவெளியில் துரைமுருகனை விமர்சித்திருந்ததாலும் நிலோஃபரைத் தி.மு.க-வுக்குள் சேர்த்துக்கொள்ள தி.மு.க-வில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது.
இதனால், அ.தி.மு.க-வின் அனுதாபியாக வலம் வரத் தொடங்கினார் நிலோஃபர். ஆனாலும், அ.தி.மு.க நிகழ்ச்சிகளில் அவரை அனுமதிக்கவில்லை கே.சி.வீரமணி.
இந்த நிலையில்தான் 2026 சட்டமன்ற பொதுத்தேர்தல் நெருங்கிய சூழலில் தி.மு.க-வில் இணைந்திருக்கிறார் நிலோஃபர். முதுமை காரணமாக, தி.மு.க பொதுச்செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகனால் முன்புபோல ஆக்டிவ்வாகச் செயல்பட முடியவில்லை.
இதனால், நிலோஃபரைச் சேர்த்துக்கொள்ளலாமா? வேண்டாமா? என்ற முடிவு தி.மு.க வடக்கு மண்டலத் தேர்தல் பொறுப்பாளரும் திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பு அமைச்சருமான எ.வ.வேலுவிடம் கொடுக்கப்பட்டது.
அவர் வாணியம்பாடி தொகுதிக்கு உட்பட்ட துரைமுருகன் தரப்பு ஆதரவாளர்களை அழைத்து சமாதானம் செய்த பிறகே நேற்று ஜோலார்பேட்டை மண்டலவாடியில் நடைபெற்ற மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார் நிலோஃபர்.

இந்த நிலையில், தி.மு.க-வில் இணைந்த நிலோஃபர் மீது கடும் விமர்சனங்களையும் முன்வைத்து வருகிறார்கள் அ.தி.மு.க-வினர். அதேபோல, சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைக்குப் போனபோது நிலோஃபர் வாணியம்பாடி வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடத்தி, பழக்கடைகளைச் சூறையாடுவதுபோல ஒரு வீடியோ வைரல் ஆனது.
அதைப் பகிர்ந்து, “அன்று `கருணாநிதி ஒழிக..’ என்று முழக்கமிடும் நிலோஃபர், இன்று `ஸ்டாலின் வாழ்க..’ என்று முழங்குகிறார். அ.தி.மு.க-வில், வாணியம்பாடி நகர்மன்றத் தலைவராக பத்து ஆண்டுகள், அதைத்தொடர்ந்து அமைச்சராக ஐந்து ஆண்டுகள் என அதிகாரமிக்க பதவிகளை அனுபவித்துவிட்டு, இன்று தி.மு.க-வுக்குச் சென்றிருக்கும் நிலோஃபர் ஒரு ஊர்க்குருவி. உயரப் பறந்தாலும், அவர் பருந்தாக முடியாது’’ எனவும் காட்டமாக விமர்சிக்கிறார்கள் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட அ.தி.மு.க-வினர்.