திருவாரூர் மாவட்டம், வடுவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகசுரக் கலைஞர் எஸ்.என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி. இவர் கடந்த 16-ம் தேதி சென்னையில் நடைபெற்ற முத்தமிழ் பேரவை இசை விழாவில் தமிழ்நாடு முதல்வர் கையினால் `ராஜரத்தினா” விருதினைப் பெற்றார். கிருஷ்ணமூர்த்தி ஐயாவுக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு, அவரிடம் பேசத் தொடங்கினோம்.
“நான் பாரம்பர்ய இசைக் குடும்பத்திலிருந்து வந்தவன். என்னுடைய தாத்தா நாகசுர வித்துவான் ஆவூர் ராஜமாணிக்கம், `தங்க நாகசுரம்’ வாசித்தவர். அப்படிப்பட்ட இசைக் குடும்பத்தில் நான் நான்காவது தலைமுறை.
என் தந்தை ராமையா பிள்ளை சிறந்த நாகசுர கலைஞர் ஆவார். அவர் நாதசுவரம் வாசிப்பதை சிறு வயதிலிருந்து பார்த்துப் பார்த்து எனக்கும் அதன் மீது ஆர்வம் வந்தது. நான் 7ம் வகுப்பு வரைதான் படித்திருக்கிறேன். ஆனால் எனக்கு படிப்பதைத் தாண்டி நாதஸ்வரம் கலையின் மீது மிகவும் ஈர்ப்பு வந்துவிட்டது. எனது 5 வயதிலிருந்தே இக்கலையினைக் கற்கத் தொடங்கிவிட்டேன்.

என் தந்தையும் என் விருப்பத்தை ஏற்றுக்கொண்டு, திருவெண்காடு ஜெயராமன் மற்றும் கோட்டூர் சுவாமிநாத பிள்ளை ஆகியோரிடம் நாகசுரம் பயில அனுப்பி வைத்தார்.
அவர்களிடம் கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் குருகுலக் கல்வியாக நாதஸ்வரம் கலையினை கற்றேன். இப்படியே படிப்படியாக நாகசுர கலையினை கற்று முடித்தேன்.
ஏறத்தாழ 10,000-க்கும் மேற்பட்ட கோயில் கச்சேரிகள், திருமண நிகழ்ச்சிகள் எனப் பல இடங்களில் நாதஸ்வரம் வாசித்தேன். 1997-ம் ஆண்டு அமெரிக்க வெஸ்லியன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நாகசுரத் தமிழ் கருத்தரங்கத்தில் இசை ஆய்வாளர் பி.எம் சுந்தரத்துடன் இணைந்து நாகசுரம் மரபைப் பற்றிய செயல்முறை விளக்க உரையினை வழங்கி நான் பெற்ற கலைக்கு மென்மேலும் பெருமையைச் சேர்த்தேன்.