இந்த நிலையில், ஷுப்மன் கில்லின் அப்பாவித்தனமான முகம் அவரைக் காப்பாற்றியதாக ஷுப்மன் கில் குறித்த சிறுவயது நினைவுகளை அபிஷேக் சர்மா பகிர்ந்துள்ளார்.
பிரேக்ஃபாஸ்ட் வித் சாம்பியன்ஸ் என்ற நிகழ்ச்சியில் ஷுப்மன் கில் குறித்து அபிஷேக் சர்மா பகிர்ந்து கொண்டதாவது: பஞ்சாப், தில்லி மற்றும் ஹரியாணாவிலிருந்து சிறுவர்கள் பலரும் 16-வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் தொடருக்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்தோம். நாங்கள் அனைவரும் ஒன்றாகவே பயிற்சிக்கு வருவோம். தர்மசாலா திடலிலிருந்து எங்களது ஹோட்டல் 500 மீட்டர் தொலைவில் இருக்கும். நாங்கள் பேருந்தில் பயணித்து திடலை சென்றடைவோம். பேருந்தின் ஓட்டுநர் பேருந்தில் பாடல்கள் போடமாட்டார். ஆனால், நாங்கள் பஞ்சாபி பாடல்கள் போட வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபடுவோம். பின்னால் இருந்து ஷுப்மன் கில்லே அதிகப்படியாக கூச்சலிடுவார்.
இந்த சம்பவம் பிரச்னையாக உருவெடுத்து பயிற்சியாளர்கள் வரை சென்றுவிட்டது. சிறுவர்கள் வாக்குவாதம் செய்வதாக ஓட்டுநர்கள் பயிற்சியாளர்களிடம் புகாரளித்தனர். வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டனர். நான், பிரப்சிம்ரன் சிங், ஷுப்மன் கில் 5-வது நபராக வரிசையில் நிற்கிறார். ஒட்டுநர்களிடம் பயிற்சியாளர்கள் யார் வாக்குவாதத்தில் ஈடுபட்டது எனக் கேட்கிறார்கள். ஷுப்மன் கில்லைக் காட்டி இந்த சிறுவனா என பயிற்சியாளர்கள் கேட்க, ஓட்டுநர் இந்த பையன் இல்லை எனக் கூறிவிட்டார். இதனைக் கேட்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.