“எங்க அம்மா அன்றைக்கே சொல்லிட்டாங்க… “படிக்காதடா… படிச்ச எல்லா இடத்திலும் நீ தெரியுவ’ன்னு. அதனால எனக்கும் ஆர்வம் வரலை” என்றான்.
பக்கத்தில் இருந்த இன்னொரு சிறுவன், “அக்கா, அவன் கிட்ட இதெல்லாம் சொல்லாதீங்க… அவன் கிட்ட சொல்றது நாய்க்கிட்ட சொல்ற மாதிரி!” என்று கிண்டலாகச் சொன்னான். இவ்வளவு இளவயதில், இவ்வளவு நல்ல வாய்ப்புகள் இருந்தும் எந்த விழிப்புணர்வும் இல்லாமல் இருக்கிறார்களே என்று கவலை வந்தது.

அந்தச் சமயத்தில் நான் சமீபத்தில் படித்த சில தரவுகளும் நினைவில் வந்தன.
BOBP-REP அறிக்கையின்படி, மீனவர் சமூகம் பொதுவாகக் குறைவான வருமானத்துடனும், அதிக கடனுடனும் (Indebtedness) இருப்பதாகக் கூறுகிறது. குடும்ப வருமானத்தை அதிகரிக்க மீன்பிடித் தொழிலில் உதவ வேண்டியிருப்பதால், மீனவர் குழந்தைகள் பள்ளியில் படிப்பைத் தொடர முடியாமல் போகும் ஆபத்தை சந்திக்கிறார்கள்.
கல்வி உதவித்தொகை, பெற்றோருக்கான விழிப்புணர்வுப் பணிகள் ஆகியவை அதிகரிக்கப்பட வேண்டும் என்பதன் அவசியத்தை இந்தச் சிறுவர்கள் மூலம் நான் உணர்ந்தேன்.
அந்த மூவரும் இன்னும் கடலைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் ஒருநாள், அந்தக் கடல் கதவாக மாறி, அவர்களின் வாழ்க்கைப் புத்தகங்கள் திறக்கும் நாளையும் நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்!