அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய செந்தில் பாலாஜியின் மனு தள்ளுபடி | Senthil Balaji petition seeking release from Enforcement Directorate case dismissed

1281396.jpg
Spread the love

சென்னை: அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், வழக்கில் குற்றச்சாட்டு பதிவுக்கு செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளது.

அமலாக்கத் துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது உத்தரவு பிறப்பிக்கபடும் என அறிவித்திருந்த நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் புதிதாக இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், வங்கி தொடர்பான அசல் ஆவணங்களுக்கும், அமலாக்கத் துறை வழங்கிய ஆவணங்களுக்கும் வேறுபாடுகள் இருப்பதால், தங்களுக்கு வழங்கிய ஆவணங்களை தடய அறிவியல் துறை ஆய்வுக்கு அனுப்பி அந்த ஆவணங்களின் உண்மை தன்மையை ஆராய உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

மேலும், வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவில், அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து உத்தரவு பிறப்பிக்க உள்ள நிலையில், வழக்கில் மீண்டும் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனுக்கள் நீதிபதி அல்லி முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர் ம.கவுதமன் ஆஜராகி, அமலாக்கத் துறையால் தங்களுக்கு வழங்கபட்ட ஆவணங்களில் கையால் எழுதி, திருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அமலாக்கத் துறை தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகி, இந்த மனுக்கள் விசாரணைக்கு உகந்தல்ல என்றும், ஆவணங்கள் அனைத்தும் வங்கியில் இருந்து தான் பெறப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும், விசாரணையை நீண்ட காலம் இழுத்தடிக்க வேண்டும் என்ற நோக்கில் இதுபோன்ற மனுக்களை செந்தில் பாலாஜி தரப்பினர் தாக்கல் செய்து வருவதால் இந்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.

அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், செந்தில் பாலாஜி தாக்கல் செய்த இரண்டு மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். மேலும், அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதி, வழக்கில் குற்றச்சாட்டுபதிவுக்காக செந்தில் பாலாஜியை ஜூலை 22-ம் தேதி நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *