ஆந்திர மாநிலத்தின் முதல் அமைச்சராக 4-வது முறையாக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு நேற்று (ஜூன் 12) பதவி ஏற்றார்.
இதில் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, ஜே.பி.நட்டா, நிதின் கட்கரி,தெலுங்கானா, புதுச்சேரி மாநில முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேடையில்
பதவி ஏற்பு விழா தொடங்குவதற்கு முன்பு மேடையில் இருந்த மத்திய மந்திரி அமித் ஷாவுக்கு, தமிழிசை சவுந்தரராஜன் வணக்கம் தெரிவித்தார். அப்போது அமித் ஷா, தமிழிசையை அழைத்துப் கையை அசைத்து கடுமையாக பேசினார்.
தமிழிசை ஏதோ சொல்ல வர, அதை அமித் ஷா மறுப்பது போல் சைகை காட்டி அமித்ஷா பேசும் காட்சிகள்சமூக ஊடகங்களில் வைரலானது. பா.ஜ.க.வின் உள்கட்சி விவகாரத்தை பொதுவெளியில் பேசியதற்காக, தமிழிசையை அமித் ஷா கண்டித்ததாக கூறப்பட்டது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழிசை விளக்கம்
இந்தநிலையில் அமித்ஷா பேசியது தொடர்பாக ஒரு நாளுக்கு பின்னர் தமிழிசை சவுந்தராராஜன்விளக்கம் அளித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
“நேற்று ஆந்திராவில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு முதன்முறையாக சந்தித்தேன். அப்போது அவர் மக்களவைத் தேர்தலில் சந்தித்த சவால்கள் குறித்தும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
மிகுந்த அக்கறையுடன்
அதை நான் விவரித்துக்கொண்டிருக்கும்போது, நேரமின்மையால், மிகுந்த அக்கறையுடன் அரசியல் மற்றும் தொகுதி பணிகளை தீவிரமாக மேற்கொள்ளுமாறு அவர் அறிவுரை வழங்கினார். தேவையற்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம்” என்று பதிவிட்டு உள்ளார்.
இதையும் படியுங்கள்: குவைத் தீவிபத்தில் தமிழர்கள் உள்பட 49 பேர் பலி