அமெரிக்கா – ஈரான் போர் விவகாரம்: “இதுதான் இந்தியாவின் நிலைபாடு" – அமைச்சர் ஜெய்சங்கர்

Spread the love

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு தொடங்கியிருக்கிறது. அமெரிக்காவுடனான இந்தியாவின் ஒப்பந்தத்தில் தொடங்கி, ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்கு அனுமதி அளிப்பதாக அமெரிக்கா கூறியது வரை அரசியலில் பேசுபொருளானது. இதற்கிடையில், அமெரிக்கா, ஈரான் போர், கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து உரையாற்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “எங்கள் அரசாங்கம் பிப்ரவரி 20-ம் தேதி ஓர் அறிக்கையை வெளியிட்டு, அனைத்து தரப்பினரும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வலியுறுத்தியது. பதட்டங்களைத் தணிக்க உரையாடல் மற்றும் ராஜதந்திரம் தொடரப்பட வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து நம்புகிறோம்.

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

பிரதமர் தொடர்ந்து சூழலை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறார். இந்த விவகாரத்தில் தொடர்புடைய அமைச்சகங்கள் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. இந்தச் சூழலில் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, மார்ச் 1-ம் தேதி பிரதமர் தலைமையில் அமைச்சரவை பாதுகாப்புக் குழு (CCS) கூடியது.

ஈரானில் நடந்த வான்வழித் தாக்குதல்கள் மற்றும் அதைத் தொடர்ந்து பல வளைகுடா நாடுகளில் நடந்த தாக்குதல்கள் குறித்து விளக்கப்பட்டது. இந்திய சமூகத்தின் பாதுகாப்பு குறித்து CCS கவலை கொண்டுள்ளது. நடந்து கொண்டிருக்கும் மோதல் குறிப்பாக இந்தியாவிற்கு கவலை அளிக்கிறது. வளைகுடா நாடுகளில் வாழ்ந்து வேலை செய்யும் ஒரு கோடி இந்தியர்கள் உள்ளனர். ஈரானிலும், படிப்பு, வேலைவாய்ப்புக்காக சில ஆயிரம் இந்தியர்கள் உள்ளனர். இந்தப் பகுதி நமது எரிசக்தி பாதுகாப்பிற்கு முக்கியமானது மற்றும் எண்ணெய், எரிவாயுவின் பல முக்கிய சப்ளையர்களை உள்ளடக்கியது.

Jaishankar awarded honorary doctorate by IIM Calcutta
அமைச்சர் ஜெய்சங்கர்

கடுமையான விநியோகச் சங்கிலி சீர்குலைவுகள், இப்போது நிலவும் உறுதியற்ற தன்மை கொண்ட சூழல் ஆகியவை இப்போதைய பிரச்னைகள். மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு வாழ்க்கை வெளிப்படையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தெஹ்ரானில் உள்ள பல இந்திய மாணவர்களை வெளி இடங்களுக்கு மாற்றுவதற்கு இந்திய தூதரகம் வசதி செய்துள்ளது. வணிக நிமித்தமாக ஈரானில் உள்ள இந்தியர்கள் ஆர்மீனியாவுக்குச் சென்று இந்தியா திரும்ப வசதி செய்யப்பட்டது.

தெஹ்ரானில் உள்ள தூதரகம் முழுமையாக செயல்பட்டு வருகிறது மற்றும் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது. இந்த நேரத்தில் இந்தியர்களுக்கு ஆதரவாக இருக்க உறுதியாக இருக்கிறோம். ஈரானிய போர்க்கப்பலான லாவனை கொச்சி துறைமுகத்தில் நிறுத்த அனுமதித்த இந்தியாவிற்கு, ஈரான் நன்றியைத் தெரிவித்திருக்கிறது.” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *