அமெரிக்க அரசியல் விமர்சகர் ஸ்காட் ஜென்னிங்ஸ் உடனான வானொலி நேர்காணலில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்துகொண்டு, வணிகம் மற்றும் வரி விதிப்பு தொடர்பான நிர்வாகக் கொள்கைகள் குறித்துப் பேசினார்.
அதில், இந்தியா மீதான வரி விதிப்பு குறித்து டிரம்ப் பேசியதாவது,
”அவர்கள் எங்களுக்கு எதிராக வரிவிதிப்பை கடைப்பிடித்து வந்தனர். சீனா, வரி விதித்து எங்களை சீரழித்தது. இந்தியாவும் வரி மூலம் சீரழித்தது. பிரேசிலும் வரி மூலம் அதையேதான் செய்தது. ஆனால், மற்ற நாடுகளின் எந்தவொரு வல்லுநர்களைக் காட்டிலும் வரி விதிப்பை சிறப்பாக புரிந்துகொண்டேன்.
பிறகு என்னுடைய வரிவிதிப்பைத் தொடர்ந்து, அமெரிக்கா மீதான வரியை அவர்கள் திரும்பப் பெறுகின்றனர். அதிக வரியை விதிக்கும் நாடு இந்தியா. ஆனால், இப்போது அவர்களே வரி விதிப்பு இல்லை என்ற நிலைப்பாட்டிற்கு வந்துள்ளனர்.
நான் வரிவிதிப்பை கையில் எடுக்காவிட்டால், அமெரிக்க இறக்குமதிகளுக்கு இது நடந்திருக்காது. வரி விதிப்பு சலுகையை அவர்கள் வழங்கியிருக்க மாட்டார்கள். அதனால், வரி உயர்வை நாம் கொண்டிருக்க வேண்டும். பொருளாதார ரீதியில் நாம் வலுவாகிவருகிறோம். அவர்கள் இனி எதையுமே சாதகமாக பயன்படுத்திக்கொள்ளப்போவதில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.