அமைச்சர் நேரு மீது FIR பதிவு செய்யாத வழக்கு – லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்! | Chennai HC order in KN nehru case

Spread the love

நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமன முறைகேடு தொடர்பாக அமைச்சர் கே.என் நேரு மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டும், வழக்குப் பதிவு செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட 2,538 பணியிடங்கள் நியமனங்களுக்கு 634 கோடி ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டுள்ளதால், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யும்படி அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியிருந்தது.

இந்த கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி அதிமுக எம்.பி. இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

உயர் நீதிமன்றம்

உயர் நீதிமன்றம்

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, அமலாக்கத் துறை அனுப்பிய தகவல்களில் ஆதாரங்கள் உள்ளதாகக் கூறி, அதன் அடிப்படையில் உடனடியாக வழக்குப்பதிவு செய்யும்படி, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், நீதிமன்றம் உத்தரவிட்டும் வழக்குப் பதிவு செய்யாமல் நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே செயல்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐ.எஸ்.இன்பதுரை சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர், வழக்குப் பதிவு செய்யக்கோரி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்திலேயே மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறினார்.

இதனையடுத்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *