ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அரக்கோணம் தனித்தொகுதியை அ.தி.மு.க தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ-வாக மூன்றாவது முறையாக நீடிக்கும் அ.தி.மு.க-வின் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டச் செயலாளரான சு.ரவி, வரும் தேர்தலிலும் களமிறங்குகிறார்.
அரக்கோணம் நகர்ப்பகுதி வாக்குகள் தி.மு.க-வுக்குக் கைகொடுத்தாலும், தொகுதியைக் கூட்டணிக்குத் தாரை வார்ப்பதால் அ.தி.மு.க-வுக்கே சாதகமான சூழல் ஏற்பட்டுவிடுகிறது. அதனால் இந்த முறை `தி.மு.க நேரடியாகப் போட்டியிட வேண்டும்’ என உடன்பிறப்புகள் போர்க்கொடித் தூக்கியிருக்கின்றனர்.
நெமிலி ஒன்றியச் சேர்மனும், தி.மு.க ஒன்றியச் செயலாளருமான பெ.வடிவேலு தனது மனைவி பவானிக்காக சீட் கேட்கிறார். மாவட்ட அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் அரக்கோணம் எம்.பி ஜெகத்ரட்சகனின் ஆதரவும் பவானிக்கு இருக்கிறது. சீட்டுக்கான ரேஸிலும் பவானியே முந்துகிறார்.

சேர்மன் வடிவேலு வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் மனைவி பவானி பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர். சயனபுரம் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்து வரும் பவானி, தி.மு.க-விலும் மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளராக ஆக்டிவ்வாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். `பவானிக்கு சீட் கிடைக்குமேயானால், வன்னியர்களின் ஆதரவும் தி.மு.க-வுக்குக் கிடைக்கும். கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டால் தேர்தல் முடிவு அ.தி.மு.க-வுக்கே மீண்டும் சாதகமாகக்கூடும்’ எனக் கணக்குப்போடுகிறார்கள் உடன்பிறப்புகள்.
அரக்கோணம் தொகுதியைப் பொறுத்தவரை பட்டியலினத்தவரும், வன்னியர்களுமே வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கின்றனர். விஜய் களத்துக்கு வந்திருப்பதால், மும்முனைப் போட்டி நிலவுகிறது. எனவே, பட்டியல் சமூக வாக்குகள் மூன்றாகப் பிளவுப்படும்.