சென்னைக்குள் இருந்து வேர்பிடுங்கி எறியப்பட்ட அடித்தட்டு மக்களின் புகலிடமாக இருக்கிறது கண்ணகி நகர். இந்தப் பகுதியில் 1,20,000 பேர் வசிக்கிறார்கள். இவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த கல்வி, விளையாட்டு, என பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது தமிழக அரசு.
கண்ணகி நகரில் கல்வியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த ‘முதல் தலைமுறை அறக்கட்டளை‘ என்கிற அறக்கட்டளை தொடங்கப்பட்டு மாணவர்களுக்கு மாலைநேர வகுப்புகளும் தற்காப்புப் பயிற்சிகளும், இளைஞர்களுக்குத் தொழிற்திறன் பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. அதன் விளைவாக இப்போது கண்ணகி நகரில் நானூறுக்கும் மேற்பட்ட முதல் தலைமுறை பட்டதாரிகள் உருவாகியிருக்கிறார்கள். பலர் வேலைவாய்ப்புகளையும் பெற்றிருக்கிறார்கள்.

தமிழ்நாடு முழுவதும் ‘எழுதுக‘ என்கின்ற ஓர் அமைப்பின் மூலம் நூல்களை எழுதுவதற்கு மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து, புத்தகங்களை எழுதி வெளியிடும் மகத்தான முயற்சி நடந்து வருகிறது. இந்த அமைப்பு, கண்ணகி நகரில் உள்ள மாணவர்களுடைய படைப்பாக்கத் திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் கடந்த ஆண்டு கோடை விடுமுறை முதல் பலருக்கும் பயிற்சி அளிக்க முன்னெடுப்புகளை எடுக்கத் தொடங்கியது. வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் இந்த அமைப்பைச் சார்ந்தவர்கள் கண்ணகி நகருக்கு வந்து அங்கிருக்கும் முதல் தலைமுறை அறக்கட்டளை கட்டடத்தில் பயிற்சியை அளித்து வந்தனர்.