சென்னை: போக்குவரத்துக் கழகங்களில் ஊக்கத் தொகையுடன் வழங்கப்படும் தொழிற்பயிற்சியில் பங்கேற்க அக்.18-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களின் விழுப்புரம், கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, எம்டிசி, எஸ்இடிசி ஆகிய மண்டலங்களில் தொழிற்பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பொறியியல் பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு 458 காலியிடங்களும், பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கு 561 காலியிடங்களும், கலை, அறிவியலில் பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு 569 காலியிடங்களும் உள்ளன.
ரூ.9 ஆயிரம் வரை ஊக்கத்தொகை: 2021 முதல் 2025-ம் ஆண்டு வரை பட்டப் படிப்பை முடித்தவர்கள் இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சிக் காலத்தில் மாதம் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்படும்.
தேர்வு முறையில் இட ஒதுக்கீடு வழங்கப்படும். மேலும், விவரங்களை https://nats.education.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். தகுதியும் விருப்பமும் உடையவர்கள் அக்.18-ம் தேதிக்குள் மேற்கூறிய இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.