அறிவாலயத்தில் தொடங்கிய பஞ்சாயத்து: உதயசூரியனுக்கு நோ… அதிக தொகுதி கேட்கும் மதிமுக, மமக – Kumudam

Spread the love

திமுகவின் டி.ஆர்.பாலு தலைமையிலான தேர்தல் குழு, தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பான ஆலோசனைகளைத் தொடங்கியுள்ளது. நேற்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இன்று மதிமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளுடன் தனித்தனியே ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

மதிமுக குழுவினர் இன்று திமுக குழுவுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, கடந்த தேர்தலை விட இந்த முறை கூடுதல் தொகுதிகளைக் கேட்டுள்ளதாகவும், ஒரு மாநிலங்களவை (Rajya Sabha) இடத்தையும் கோரியுள்ளதாகவும் தெரிவித்தனர். குறிப்பாக, கடந்த முறை 6 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக, வரும் தேர்தலில் தனிச் சின்னத்தில் மட்டுமே போட்டியிடும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. தொகுதிகளைக் குறைத்துக் கொள்ளுமாறு திமுக தரப்பில் தங்களைக் கேட்கவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையிலான குழு பங்கேற்றது. கடந்த முறை மணப்பாறை மற்றும் பாபநாசம் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மமக, இந்த முறை 5 தொகுதிகளைக் கேட்டுள்ளது. இது குறித்துப் பேசிய ஜவாஹிருல்லா, “நாங்கள் கூடுதல் தொகுதிகளைக் கேட்டுள்ளோம். இது முதற்கட்டப் பேச்சுவார்த்தைதான். மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாகக் கூறியுள்ளனர். இந்த முறையும் நாங்கள் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட உள்ளோம்” என்று தெரிவித்தார்.

மக்கள் நீதி மய்யம் பேச்சுவார்த்தை தள்ளிவைப்பு 

மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் திமுக சார்பில் தொகுதி பங்ரகீடு பேச்சுவார்த்தை நடத்துவதாக இருந்தது.  ஏற்கனவே 15 தொகுதி பட்டியலை திமுக தலைமையிடம் கொடுக்கப்பட்டது. ஆனால் 3 தொகுதிகள் மட்டுமே மநீம ஒதுக்க முடியும் என திமுக தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் திடீரென பேச்சுவார்த்தை 27-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடதக்கது. 

நேற்று தொடங்கிய இந்தப் பேச்சுவார்த்தைகள், அடுத்தடுத்த நாட்களில் காங்கிரஸ், விசிக மற்றும் இடதுசாரி கட்சிகளுடனும் நடைபெறவுள்ளது. கூட்டணிக் கட்சிகளின் கோரிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசித்த பின்னரே இறுதித் முடிவுகள் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *