விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூரை, டெல்லியில் சந்தித்தோம். திமுக – காங்கிரஸ் கூட்டணி, நாடாளுமன்ற விவகாரங்கள் உள்ளிட்டவைக் குறித்து அவருடன் விரிவாக உரையாடினோம்.
நாடாளுமன்றத்தில் என்ன விஷயத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றீர்கள்?
குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் 18 மணி நேரம் நடக்கும் என்று முடிவு செய்யப்பட்டு இருந்தது. அதில் முதல் ஒரு மணி நேரம் பாஜக உறுப்பினர்கள் பேசினார்கள். அதற்கு பிறகு எதிர்க்கட்சித் தலைவர் பேச இருந்தார். இறுதியாக பிரதமர் பேசி அந்த விவாதத்தை முடித்து வைப்பதுதான் இதுவரை திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் முதல் நாளில் ஓய்வு பெற்ற ராணுவ தளபதி நரவானே அவர்கள் சீனப் படைகள் இந்திய எல்லைக்குள் நுழைந்தது என அவரது புத்தகத்தில் எழுதியதை குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச விரும்பினார்.
ஆனால் அவ்வாறு செய்யக் கூடாது என பாஜக-வினர் பிரச்னையை கையில் எடுத்தார்கள். மக்களவைத் தலைவருக்கான உரிய மரியாதையை கொடுக்காமல் அவர்கள் நடந்து கொண்டார்கள். அவரைப் பேச விடாமல் தடுத்ததோடு மட்டுமல்லாமல் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவையும் பேசவிடாமல் தடுத்தார்கள்.

திரிணாமுல் காங்கிரஸ் திமுக என எதிர்க்கட்சிகளை சேர்ந்த யாருக்கும் பேச வாய்ப்பு தரப்படவில்லை. ஆனால் பாஜக-வின் கூட்டணி கட்சிகளை சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சி போன்ற கட்சிகளை சேர்ந்தவர்களை மட்டும் பேச சபாநாயகர் அனுமதித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எங்கள் எட்டு பேரையும் இடைநீக்கமும் செய்து இருக்கிறார்கள். குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறார்கள். பிரதமர் பேசாமல் இப்படி ஒரு தீர்மானம் நிறைவேறுவது இந்திய வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை
குடியரசு தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் இரண்டு அவைகளிலுமே பிரதமர் பேச வேண்டும் என்பது கட்டாயமான மரபா?
ஆம் அது கட்டாயமான மரபு தான். ஆனால் பாஜக இத்தகைய மரபுகள் அத்தனையையும் உடைக்கக்கூடிய வேலைகளில் இறங்கி இருக்கிறார்கள்.
மக்களவையில் இருந்து தான் பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அப்படி இருக்கும்போது இங்கு பேசாமல் மாநிலங்களவையில் சென்று பேசிக் கொள்கிறேன் என பிரதமர் செய்தது ஜனநாயகத்தின் மீது தாக்குதலாகவே பார்க்கிறோம்.