`அவ்வளவுதான் முடிந்துவிட்டது நினைக்கும்போது.!' – வெளுத்தெடுத்த முகுல்; மீண்டும் ஒரு திரில்லர்

Spread the love

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லக்னோ vs கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டி, ஒரு த்ரில்லர் போட்டியாக மாறி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. கடந்த போட்டியில் மழையின் காரணமாக போட்டி தடைபட்டு ஒரு புள்ளியைப் பெற்றிருந்தாலும், அடுத்தடுத்த போட்டிகளை வென்றாக வேண்டும் என்ற முனைப்போடு ரஹானே தலைமையிலான கொல்கத்தா அணி களம் இறங்கியது.

Lucknow
Lucknow

தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹானே மற்றும் ஃபின் ஆலன் இறங்கினார்கள். ஆனால், ஆலன் பவர் பிளேவிலேயே தனது விக்கெட்டை பிரின்ஸ் யாதவிடம் பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த ரகுவன்ஷியும், கேப்டன் ரஹானேவும் பொறுப்புடன் ஆடி அணியின் ரன் கணக்கை உயர்த்தினர்.

துரதிஷ்டவசமாக, திக்வேஷ் வீசிய பந்தில் சிக்கி 41 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் ரஹானே.

பின்னர் ரகுவன்ஷியும் 45 ரன்களுக்கு அவுட் ஆக, கிரீன் மற்றும் ரோவ்மன் பவலின் குட்டி கேமியோவின் மூலம் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 181 ரன்களை எட்டியது.

182 ரன்கள் என்ற இலக்கை நோக்கி லக்னோ அணி களம் புகுந்தது. ஓப்பனர்களாக மார்க்ரம் மற்றும் மிட்செல் மார்ஷ் இணையினர் தொடக்கத்தில் அதிரடி காட்டினாலும், பவர் பிளே முடிவதற்குள் வைபவ் அரோரா வீசிய ஒரே ஓவரில் இருவரும் ஆட்டமிழந்தனர். ஒரு பார்ட்னர்ஷிப் அமைத்து ஆட வேண்டிய கட்டாயத்தில் இருந்த லக்னோ அணிக்கு, ரிஷப் பண்ட் கை கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரும் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்து வந்த திசையை நோக்கி நடையை காட்டினார்.

Mukul
Mukul

அடுத்த கொஞ்ச நேரத்திலேயே பூரன் மற்றும் சமத் வெளியேற, மறுபக்கம் லக்னோ அணிக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக ஆயுஷ் பதோனி மட்டும் 54 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 128 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து லக்னோ அணி தத்தளித்துக் கொண்டிருந்தது. ‘கிட்டத்தட்ட வெற்றி நிச்சயம்’ என்ற மெத்தனத்தில் கொல்கத்தா ரசிகர்கள் இருந்தனர். 24 பந்துகளில் 54 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முக்கிய பேட்ஸ்மேன்களை இழந்து தவித்தது லக்னோ.

ஆனால், முகுல் சௌத்ரியின் அதிரடி ஆட்டம் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் ஆச்சரியப்பட வைத்தது. “அவ்வளவுதான் முடிந்துவிட்டது” என நினைத்த போட்டியை அவர் வெற்றியை நோக்கி நெருக்கமாகக் கொண்டு வந்தார். கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் வைபவ் அரோரா பந்து வீசினார். வைட், யார்க்கர், சிக்ஸர் என பல டிராமக்களுக்குப் பின்னர், கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலை உருவானது.

கடந்த போட்டியில் ஸ்லோயர் ஒன் வீசி அணியை வெற்றி பெறச் செய்த பிரசித் கிருஷ்ணாவைப் போல், வைபவ் அரோராவும் ஒரு ஸ்லோயர் ஒன் வீசினார். அதை முகுல் சௌத்ரி அடிக்கத் தவற, பந்து கீப்பரிடம் சென்றது.

Mukul
Mukul

கீப்பர் ஸ்டம்பை நோக்கி எறிய, அது ஸ்டம்பில் படாமல் போனது. இதன் மூலம் 3 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணி த்ரில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் ஒருதலைப்பட்சமாக முடிந்த போட்டிகளைப் பார்த்து அலுத்துப் போன ரசிகர்களுக்கு, கடந்த சில போட்டிகள் கடைசி பந்து வரை சென்று விறுவிறுப்பான விருந்தாக அமைகின்றன. அதிரடியாக ஆடி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த முகுல் சௌத்ரி ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *