வழிபாட்டு முறையும் சடங்கியல் சார்பும் :
பங்குனி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை புதுப்பட்டி ஊரில் உள்ள முத்தாரம்மனுக்கு கோவில் கொடை திருவிழா கொடுக்கப்படுகிறது.
இந்த அம்மனுக்கு பீடமோ, சிலையோ கிடையாது. கருவறையும் வட்டவடிவில் தான் அமைந்திருக்கிறது. கோவில் திருவிழாவிற்கு முந்தைய செவ்வாய்கிழமையில் வேளார் ஒருவர் விரதம் இருந்து அம்மன் சிலையை செய்யத் தொடங்கி, ஆறுநாட்களில் செய்து முடித்த சிலையை தீயில் காட்டாமல் பச்சை மண்ணாக உலர்த்தியே வைத்திருக்கிறார்கள். பின் அதற்கு வண்ணம் பூசி அதனை ஊர்வலாக செவ்வாய்கிழமை அன்று எடுத்துச் செல்கிறார்கள்.
பின் அந்த கோவிலின் கருவறையில் அந்த சிலையை வைத்து நேர்ச்சைகளை செய்கிறார்கள். புதன்கிழமை இரவு வரைக்கும் அந்த சிலை கோவில் கருவறையிலே இருக்கிறது. இரவு எட்டு மணிக்கு மேல் சிலையை தலைச்சுமையாய் ஊருக்கு கிழக்கே உள்ள தட்டாவூரிணிக்கு குளக்கரை வழியாக மேளத்தாளத்தோடு கொண்டு செல்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட தூரத்திலே மேளக்குழுவினர் நின்று விடுகின்றனர். சிலையைச் சுமந்து செல்லும் வேளாரோடு இரண்டு காவல்காரர்கள் கம்போடு செல்கின்றனர். வேறு யாரும் அவர்களோடு செல்வதில்லை.