சிவகாசி: ஆடிப்பெருக்கையொட்டி சிவகாசியில் உள்ள அச்சகங்களில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு 2026-ம் ஆண்டுக்கான காலண்டர் ஆல்பம் வெளியிடப்பட்டது.
சட்டப்பேரவை தேர்தல் வர உள்ளதால் அரசியல் கட்சிகளின் ஆர்டர்கள் அதிகம் வருவதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிவகாசியில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலுக்கு அடுத்தபடியாக அச்சுத்தொழில் பிரதானமாக உள்ளது. சிவகாசியில் உள்ள 150-க்கும் அதிகமான அச்சகங்களில் நோட்டுப் புத்தகங்கள், டைரிகள், காலண்டர்கள் ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. இதில் 50-க்கும் அதிகமான அச்சகங்கள் பிரத்யேகமாக காலண்டர் தயாரிப்பில் மட்டும் ஈடுபட்டுள்ளன.
இங்கு ஆண்டு தோறும் ஆடிப்பெருக்கு தினத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, அடுத்த ஆண்டுக்கான காலண்டர் ஆல்பம் வெளியிடப்படுவது வழக்கம். அதன்படி நேற்று ஆடிப்பெருக்கையொட்டி சிவகாசியில் உள்ள அச்சகங்களில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு 2026-ம் ஆண்டுக்கான காலண்டர் ஆல்பம் வெளியிடப்பட்டது.
ரூ.25 முதல் ரூ.2,500 வரை பல்வேறு வடிவங்களில் தினசரி காலண்டர்கள், மேஜை காலண்டர்கள், மாத காலண்டர்கள் என 350-க்கும் மேற்பட்ட வடிவங்களில் காலண்டர்கள் தயாரிக்கப்பட உள்ளன. 2026-ல் சட்டப்பேரவைத் தேர்தல் வருவதால் அரசியல் கட்சிகளின் சின்னங்கள் வடிவிலான ‘டை கட்’ காலண்டர்கள் அதிகமாக உற்பத்தி செய்யப்பட உள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் காலண்டர்கள் அச்சிடப்படுகின்றன.
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் காலண்டர்களை அதிக அளவில் வாங்க ஆர்வம் காட்டி ஆர்டர்களை அளித்து வருகின்றனர். இதனால், உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து காலண்டர் உற்பத்தியாளர்கள் கூறுகையில், “1996 முதல் 2017-ம் ஆண்டு வரை வரி விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள் பட்டியிலில் காலண்டர் இருந்தது. ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்டபோது காலண்டருக்கு 12 சதவீதம் வரி விதிக்கப்பட்டது.
2022-ம் ஆண்டு காலண்டருக்கான ஜி.எஸ்.டி. வரி 18 சதவீதமாக உயர்த்தப்பட்டதாலும், மூலப்பொருட்கள் விலை உயர்வாலும் காலண்டர் விலை 35 சதவீதம் உயர்ந்ததால் விற்பனை பாதிக்கப்பட்டது. மக்களவைத் தேர்தல் காரணமாக அரசியல் கட்சியினரின் ஆர்டர்கள் அதிகரிப்பால் 2024-ல் காலண்டர் விற்பனை விறுவிறுப்பாக இருந்தது. அதேபோல், அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வருவதால் அரசியல் கட்சியினரின் ஆர்டர்கள் காரணமாக 30 சதவீதம் விற்பனை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. விலையில் பெரிய அளவில் மாற்றம் வர வாய்ப்பில்லை’’ என்று கூறினர்.