இது குறித்து முதல்வர் மு. க. ஸ்டாலின் தமது எக்ஸ் தளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
ஹிந்தியை மூன்றாவது மொழியாக கட்டாயப்படுத்துவதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதைத்தொடர்ந்து
மகாராஷ்டிரத்தில் மராத்தி மட்டுமே கட்டாயம் என்று அம்மாநில முதல்வர் கூறியிருக்கிறார்.
இதன்மூலம், ஹிந்தி பேசாத மாநிலங்களில் ஹிந்தி கட்டாயப்படுத்தப்படுவதற்கு பரந்தளவில் எதிர்ப்பும் கண்டனமும் எழுந்ததையடுத்து மகாராஷ்டிர முதல்வர் தமது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கியுள்ளார்.
இந்தநிலையில், மத்திய அரசும் உள்துறை அமைச்சகமும் கீழ்காணும் விஷயங்களை தெளிவுபடுத்த வேண்டும்:
மகாராஷ்டிரத்தில் தேசிய கல்வி கொள்கையின்கீழ், மராத்தி தவிர்த்து மூன்றாவது மொழியாக பிற மொழி எதையும் கட்டாயம் படித்தாக வேண்டுமென்பதில்லை என்ற நிலைப்பாட்டை இப்போது மத்திய அரசு ஏற்கிறதா?
தேசிய கல்வி கொள்கையின்கீழ், மூன்றாவது மொழியாக ஒரு மொழியை பாடமாக கற்பிக்க வேண்டியதில்லை என்ற தெளிவான வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு வெளியிடுமா?
மூன்றாவது மொழி கட்டாயமென்பதை மாநிலங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்ற காரணத்தைச் சுட்டிக்காட்டியே தமிழ்நாட்டுக்கு விடுவிக்கப்படாமல் வைத்திருக்கும் ரூ. 2,152 கோடி நிதியை மத்திய அரசு விடுவிக்குமா?
மேற்கண்ட கேள்விகளுக்கு மத்திய அரசு விளக்கமளிக்க முதல்வர் மு. க. ஸ்டாலின் அழுத்தமாக வலியுறுத்தியுள்ளார்.