நாடு முழுவதும் ஆன்லைன் மோசடிகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. இந்த மோசடிக்குப் பெரும்பாலும் முதியவர்களும், பெண்களும்தான் இலக்காகின்றனர்.
டிஜிட்டல் கைது மற்றும் ஆன்லைன் பங்கு வர்த்தகம் இதில் அதிக பங்கு வகிக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் புனேயைச் சேர்ந்த 72 வயது டாக்டர் ஒருவர் 10 சதவீத லாபத்திற்கு ஆசைப்பட்டு வெறும் 39 நாட்களில் ரூ.12.31 கோடியை இழந்துவிட்டார்.
இது குறித்து சீனியர் இன்ஸ்பெக்டர் ஸ்வப்னாலி ஷிண்டே கூறுகையில், “‘சம்பந்தப்பட்ட டாக்டரின் மொபைல் நம்பர் வாட்ஸ்ஆப் குரூப் ஒன்றில் சேர்க்கப்பட்டது. அந்தக் குரூப்பில் இருந்தவர்கள் ஆன்லைன் பங்கு வர்த்தகத்தில் அதிக அளவில் லாபம் கிடைப்பது குறித்து சாட்டிங் செய்தவண்ணம் இருந்தனர்.
டாக்டர் தொடர்ந்து அந்த மெசேஜ்களைப் படித்து வந்தார். அது அவருக்கு மிகவும் பிடித்துப்போனது. குரூப் அட்மின் கொடுக்கும் பங்கு வர்த்தகம் தொடர்பான தகவல்கள் மூலம் அதிக லாபம் கிடைப்பதாக டாக்டர் நம்பத்தொடங்கினார்.

இதையடுத்து குரூப் அட்மினை தொடர்புகொண்டு தானும் இந்தப் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட விரும்புவதாகத் தெரிவித்தார். உடனே குரூப் அட்மின் ஒரு லிங்க் அனுப்பி அதனைப் பதிவிறக்கம் செய்து அந்தச் செயலி மூலம் வர்த்தகம் செய்யும்படி கேட்டுக்கொண்டார். அதோடு ஆன்லைன் பங்கு வர்த்தகத்தில் ஆண்டுக்கு 8 முதல் 10 சதவீதம் லாபம் கிடைக்கும் என்று தெரிவித்தார்.