பா.ஜ.க தரப்பில் இருந்து தொடர்ந்து பெண்கள் மீதான அவதூறுகள், ஆபாசப் பேச்சுகள் நடைபெறுகின்றன. பா.ஜ.க-வின் சித்தாந்தமே பெண்களை வெறும் உடலாக மட்டுமே பார்ப்பதுதானே… பெண்களுக்கு அறிவு, உணர்வு, திறமை, தைரியம் உள்ளது என்பதை அவர்கள் ஏற்கவே மாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை பெண் குழந்தை பெறும் இயந்திரம் மட்டுமே. இதை RSS தலைவர் வெளிப்படையாகப் பிரசாரம் செய்திருக்கிறார்.
காஷ்மீரில் 8-வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் முதல், உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் வழக்கில் குல்தீப் சிங் செங்கார் கைதுசெய்யப்பட்டது வரை, பா.ஜ.க குற்றவாளிகளுக்கு ஆதரவாகத்தான் இருந்திருக்கிறது. விளையாட்டு வீராங்கனைகள் குற்றம்சாட்டிய பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் மகனை எம்.பி-யாக்கி அழகுபார்க்கிறார்களே… அதன் தொடர்ச்சிதான் இப்போது என் மீதான ஆபாசப் பேச்சும்.
இதில் வேடிக்கை என்னவென்றால், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற கண்டன உரையில்தான் என்னைப் பற்றிய ஆபாசப் பேச்சு பேசியிருக்கிறார். இதுவரை பா.ஜ.க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏன் அவர்களின் தலைவர்கள், இதுவரை கண்டனம்கூட தெரிவிக்கவில்லை. இதுதான் அவர்களின் அரசியல் புரிதல். பெண்கள் உழைப்பு, திறமை, அறிவு மூலம் முன்னேற முடியாது என்று கருதுகின்றனர்.